இந்திய அணி பந்துவீச்சு
தன் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தான் சிறந்தவர்கள் என ஒரு முன்னாள் வீரர் சொல்வதில் தவறில்லை. ஆனால், பல நாட்டினரும், தோல்வி அடைந்த எதிரணிகளும் இந்திய அணியின் பந்துவீச்சு உலகின் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக ஒப்புக் கொள்கின்றனர்.
ரிக்கி பாண்டிங் பேச்சு
அப்படி இருக்கும் இந்திய பந்துவீச்சை முழுதாக நன்றாக பாராட்டி விட்டு, சுழற் பந்துவீச்சாளர்களை மட்டும் மட்டம் தட்டி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை உயர்த்திப் பேசி இருக்கிறார் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
ஆஸ்திரேலியா வெற்றிகள்
சமீபத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியை தன் சொந்த மண்ணில் மிரட்டலாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வீழ்த்தியது. கடினமான ஆஷஸ் தொடரை சமன் செய்தது.
இந்தியா அசத்தல் வெற்றி
மறுபுறம், இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் தொடர்களில் வைட்வாஷ் வெற்றி பெற்று கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்தியாவின் வெற்றி நடைக்கு முக்கிய காரணம் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சிறந்த பந்துவீச்சு எது?
இந்த நிலையில், ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய பந்துவீச்சு - இந்திய பந்துவீச்சு குறித்து பேசினார். முதலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சு தான் தன்னைப் பொறுத்தவரை சிறந்தது என்றார் பாண்டிங்.
மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள்
பின்னர், இந்திய பந்துவீச்சில் சிறப்பாக இருப்பதாகவும், பும்ரா, ஷமி கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அவர்களுடன் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா சேரும் போது மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் கிடைப்பதாக கூறினார் பாண்டிங்.
தடுமாறும் அஸ்வின், ஜடேஜா
அந்த வேகப் பந்துவீச்சுடன், சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா இருப்பதால், இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதல் சிறப்பாக உள்ளது என்ற பாண்டிங், ஆஸ்திரேலியாவில் அஸ்வின், ஜடேஜா தடுமாறுவதாக ஒரு விஷயத்தை கூறினார்.
நாதன் லியோன் தான் பெஸ்ட்
ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் அவர்களை விட சிறப்பான ரெக்கார்டு வைத்திருக்கிறார் என்று அப்படியே ஆஸ்திரேலியாவை உயர்த்திப் பேசினார் பாண்டிங். இந்திய வேகப் பந்துவீச்சாளர்களிடம் குறை சொல்ல முடியாததால், அவர் சுழற் பந்துவீச்சாளர்களை குறி வைத்துள்ளார்.
மட்டம் தட்டி பேசிய பாண்டிங்
அவரவர் சொந்த மண்ணில் அந்தந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் தான் சிறப்பாக செயல்படுவார்கள். அதற்கு காரணம், ஆடுகளங்கள் அவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும் என்பது தான். ஆனால், இதை ஒரு சாக்காக கூறி இந்தியாவை மட்டம் தட்டி இருக்கிறார் பாண்டிங்.
விக்கெட் எடுக்க வேண்டும்
இந்திய ரசிகர்கள் சிலர் இணையத்தில், பாண்டிங் பேச்சை பொய்யாக்கும் வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்த டெஸ்ட் தொடரில் ஆடும் போது அஸ்வின், ஜடேஜா அதிக விக்கெட்களை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.