சென்னை: சிந்துவின் ஆட்டத்தை பார்த்துவிட்டு தனது மகளையும் பேட்மின்டன் வீராங்கனையாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் கிரிக்கெட் வீரர் அஸ்வின்.
ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களையும் டிவி பெட்டியின் முன்பாக கட்டிப்போட்டது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் பைனல் போட்டி. இதற்கு அஸ்வினும் விதி விலக்கு இல்லை. மேற்கிந்திய தீவு சுற்றுப் பயணத்தில் இருக்கும் அஸ்வின், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், சிந்து ஆடிய பைனல் போட்டியை பார்த்துள்ளார்.
சிந்து வெள்ளி வென்ற நிலையில், அஸ்வின் வீடியோ மெசேஜ் பகிர்ந்துள்ளார். இதை பிசிசிஐ டிவிட்டரிலும் பகிர்ந்துள்ளது. அதில், "நான் இப்போட்டியை பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நல்ல போட்டியை கொடுத்தீர்கள். வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. இருப்பினும் ஒட்டுமொத்த நாட்டையும், டிவி பெட்டியின் முன்னால் அமரச் செய்தீர்கள்.
நமது நாட்டு விளையாட்டின் மிகச்சிறந்த தூதர் நீங்கள். பேட்மின்டன் விளையாட்டு இனிமேல் பிரபலமாகும். எனது மகள் ஒலிம்பிக்கில் பேட்மின்டன் விளையாடவும் வாய்ப்புள்ளது. உங்கள் ஆட்டத்தால் கவரப்பெற்றுள்ளேன். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.
உலகின் நம்பர்-1 சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினே தனது மகளை பேட்மின்டன் வீராங்கனையாக பார்க்க ஆசைப்படுகிறார் என்றால், நாட்டில் பேட்மின்டன் மீதான மோகத்தை சிந்து ஆட்டம் எப்படி தூண்டியிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
பேட்மின்டன் கோச்சிங் சென்டர்களில், ஆண், பெண் பிள்ளைகளோடு அட்மிஷனுக்காக காத்திருக்கும் பெற்றோர் எண்ணிக்கை இன்று காலையிலேயே அதிகரித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிப்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.
.@Pvsindhu1, I hope my daughter plays badminton one day, says @ashwinravi99 in this delightful message. pic.twitter.com/u5KQ6eqzBW
— BCCI (@BCCI) August 19, 2016