லெஜெண்ட்களின் சிறப்பான ஆட்டம்
இந்தியா மற்றும் இலங்கை லெஜெண்ட்கள் இடையில் சாலை பாதுகாப்பு உலக தொடர் 2021ன் இறுதிப்போட்டி நேற்றைய தினம் ராய்ப்பூரின் ஷாகித் வீர் நாராயணன் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய லெஜெண்ட்கள் வெற்றி பெற்றனர்.
விறுவிறுப்பான போட்டி
கடந்த சில தினங்களாக இந்தியா -இங்கிலாந்து தொடருக்கு இணையான விறுவிறுப்பை சாலை பாதுகாப்பு உலக தொடர் அளித்து வந்தது. நேற்றைய இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 இலக்கை இலங்கை அணிக்கு அளித்தது. இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இதையடுத்து களமிறங்கிய இலங்கை ஜாம்பவான்களால் 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கோப்பையை வெற்றி கொண்டது. இதைதொடர்ந்து சாலை பாதுகாப்பு உலக தொடரின் முதல் தொடரை இந்திய ஜாம்பவான்கள் வெற்றி கொண்டுள்ளனர்.
62 ரன்கள் குவிப்பு
நேற்றைய போட்டியில் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான் சிறப்பான ஆட்டத்தை அளித்துள்ளார். அவர் 36 பந்துகளில் 62 ரன்களை அடித்துள்ளார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸ்கள் அடக்கம். மேலும் அவர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். யுவராஜ் சிங் 60 ரன்களும் சச்சின் டெண்டுல்கர் 30 ரன்களும் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர்.
சொதப்பிய பௌலர்கள்
ஆனால் இலங்கையின் பௌலர்கள் சிறப்பான பௌலிங்கை அளிக்கவில்லை. அணியின் ரங்கனா ஹெராத், சனத் ஜெயசூர்யா, பர்வேஸ் மஹரூப் மற்றும் கௌசல்யா வீரரத்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய தில்சன் இந்த போட்டியில் விக்கெட்டுகள் எதையும் எடுக்கவில்லை.
சாலை பாதுகாப்பு தொடர் வெற்றி
கடந்த 2011 உல கோப்பை இறுதிப்போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி, இலங்கையை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது அதேபோல சாலை பாதுகாப்பு உலக தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டு வெற்றி கொண்டுள்ளது.