ரோகித் சர்மா
ஐபிஎல் தொடரில் ஹிட் மென் ரோகித் சர்மாவுக்கும், பௌலர் இஷாந்த் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டியில் இருந்து விலகிய ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய பயிற்சி அகாடமியில் உடல் தகுதியை நிரூபிக்க பயிற்சி பெற்று வந்தார்.
இஷாந்த் சர்மாவும் தகுதியிழப்பு
இஷாந்த் சர்மாவும், அங்கு பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இருவராலும் டிசம்பர் 17-ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்டிலும், 26-ஆம் தேதி தொடங்கும் 2-ஆவது டெஸ்டிலும் விளையாட முடியாது.
வாய்ப்பில்லை ராஜா
ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கும் 3-வது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். இது குறித்து பிசிசிஐ அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஆஸ்திரேலியாவில் 2 வாரம் தனிமைப்படுத்துதல், அதன்பிறகு பயிற்சி ஆகிய காரணங்களால் இருவராலும் முதல் 2 டெஸ்டுகளில் விளையாட முடியாது எனபிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகுதி தேவை
மூன்றாவது டெஸ்டில் விளையாட பந்துவீச்சு தகுததியை பெற்றுள்ள இஷாந்த், அதில் பங்கேற்க வேண்டுமானால் உடனடியாக விமானத்தில் ஏற வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை முடித்த பிறகுதான் அவரால் பயிற்சியைத் தொடங்க முடியும்.
பந்து வீச்சு பரவாயில்லை
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு உடற்தகுதியை அடைந்தபின், கடந்த வாரத்தில் இஷாந்தின் பந்துவீச்சு படிப்படியாக அதிகரித்துள்ளது. டெஸ்ட் போட்டி என்பதால் ஒரு நாளில் குறைந்தது 20 ஓவர்கள் பந்து வீசும் நிலையில் அவர் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
நான்கு வார பந்து வீச்சு தேவை
டெஸ்ட்-போட்டி உடற்தகுதிக்கு திரும்புவதற்கு, அவருக்கு இன்னும் நான்கு வாரங்கள் சரியான பந்துவீச்சு தேவை என்பதால் அவர் உடனடியாக செல்ல வேண்டும் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. ரோகித் சர்மா இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் உடல் தகுதியை நிரூபித்து டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மட்டுமே அவர் ஆஸ்திரேலியா செல்ல முடியும்.
டைம் இல்லை
அங்கு 2 வாரங்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து அதன்பிறகு பயிற்சி முடித்து தான் போட்டியில் பங்கேற்க முடியும். ரோகித் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மற்ற அணியின் உறுப்பினர்களுடன் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு பறந்திருந்தால் முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
கஷ்டம்தான்
கேப்டன் விராட் கோலியும் முதல் டெஸ்டுக்கு பிறகு தாயகம் திரும்பும் நிலையில், ரோகித்தும், இஷாந்த் சர்மாவும் நீக்கபட்டுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டியிலாவது ஹிட் மென் ரோகித் சர்மா ஆட்டத்தை ரசிக்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதில் ஷ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என தெரிகிறது.