மும்பை: காயத்தால் அவதிப்படும், இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர் ரோகித் ஷர்மா 2 மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய தேவை ஏற்பட்டால் இந்த ஓய்வு காலம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா, 3-0 என்ற கணக்கில் வென்றது. பவுலர்களே ஆதிக்கம் செலுத்திய அந்த டெஸ்ட் தொடரில் 3 அரை சதம் விளாசியவர் ரோகித் ஷர்மா. கொல்கத்தா டெஸ்டில் அவர் அடித்த 81 ரன்கள் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
ஒருநாள் தொடரில் முதல் 4 போட்டிகளிலும் ரன் அடிக்க திணறிய ரோகித், வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும், கடைசி ஒருநாள் போட்டியில் 70 ரன்கள் விளாசி, இந்திய வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
இந்த நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் நிருபர்களிடம் இதுகுறித்து கூறுகையில், ரோகித்துக்கு ஏற்பட்ட காயத்தை நீங்களே பார்க்க நேரிட்டிருக்கும். அவர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். ஒருவேளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவையும் ஏற்படலாம்.
அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் கூட 8 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டிவரும். அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிவந்தால், ரோகித் ஷர்மா ஓய்வெடுக்க வேண்டிய கால கட்டம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு பிரசாத் தெரிவித்தார்.