இந்திய பவுலிங்
பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்த போதும், வெஸ்ட் இண்டீஸ் அணியை ரன் குவிக்க விடாமல் இந்திய பவுலர்கள் அசத்தினர். சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், ரவி பிஷ்னாய், அக்ஷர் பட்டேல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இந்நிலையில் இதில் ஆவேஷ் கான் தனி கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆவேஷ் கானின் சொதப்பல்
2வது மற்றும் 3வது டி20லும் வாய்ப்பு பெற்ற ஆவேஷ் கான் மிக மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். 2வது டி20ல் 2.2 ஓவர்கள் மட்டுமே வீசி 31 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற சூழலிலும் அதனை கட்டுப்படுத்தாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல 3வது டி20 போட்டியில் 3 ஓவர்களை மட்டுமே வீசி 47 ரன்களை விட்டுக்கொடுத்தார். பதிலுக்கு ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. அவரின் எகானமி 15.33 ரன்கள் ஆகும்.
கம்பேக்
இதனையடுத்து இனியும் அவருக்கு வாய்ப்பு தரக்கூடாது என விமர்சனங்கள் குவிந்தன. ஆனால் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா, ஆவேஷ் கானுக்கு ஆதரவாக நின்றனர். ஒருவர் சொதப்பினாலும் வாய்ப்பு தந்தால் தான் நல்ல கம்பேக் தருவார் எனக் கூறினர். ஆனால் ஆவேஷ் கானுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்துக்கொண்டே இருந்தது.
ரோகித்தின் விளக்கம்
ஆனால் நேற்றைய போட்டியில் ஆவேஷ் கான் அசத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் 2 விக்கெட்களை கைப்பற்றி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதுவும் டாப் ஆர்டரின் விக்கெட்கள் ஆகும். இதுகுறித்து பேசிய ரோகித் சர்மா, அவேஷ் கானின் திறமை குறித்து எங்களுக்கு தெரியும். அனைவருக்கும் 2 அல்லது 3 போட்டிகள் மோசமாக அமையும். ஆனால் அவரின் திறமையை நாம் மனதில் வைக்க வேண்டும்.
வாய்ப்புகள் உறுதி
வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளையும் நேரத்தையும் கொடுக்க வேண்டும். இந்த களத்தை ஆவேஷ் கான் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறினார். இதன்மூலம் 5வது டி20லும் ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு உறுதியாகியுள்ளது.