3வது ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை இன்றைய போட்டியில் அமைத்தனர்.
சிறப்பான பவர்-ப்ளே
கடந்த போட்டியில் இருவரும் சிறப்பான ரன்களை குவிக்கவில்லை. குறிப்பாக முதல் போட்டியில் 98 ரன்களை அடித்த ஷிகர் தவானுக்கு கடந்த போட்டி கை கொடுக்கவில்லை. 4 ரன்களில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் இன்றைய போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் இவர்கள் இன்றைய தினம் மைதானத்தில் களமிறங்கியது இவர்களது ஆட்டத்தின் மூலம் தெரிந்தது.
அடித்து ஆடிய கூட்டணி
கடந்த இரு போட்டிகளை கணக்கிடும்போது புனேவின் எம்சிஏ மைதானத்தில் துவக்கத்தில் களமிறங்கும் அணி 350 ரன்களுக்கு மேல் எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போதுதான் எதிரணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். இந்த கவனம் துவக்க வீரர்கள் ரோகித் மற்றும் ஷிகரின் ஆட்டத்தில் இன்று தெரிந்தது.
100 ரன்கள்
இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடினர். 14 ஓவர்களில் 100ஐ தொட்டனர். அதிரடியான இந்த பார்ட்னர்ஷிப்பில் பவுண்டரிகளும் சிக்ஸ்களும் பறந்தன. இந்நிலையில் 37 ரன்களை எடுத்தபோது ரோகித் சர்மா அவுட்டானார். தொடர்ந்து ஆடிய ஷிகர் தவான் 67 ரன்களில் அவுட்டானார்.
2வது பார்ட்னர்ஷிப் சாதனை
இன்றைய போட்டியின்மூலம் இருவரும் துவக்க வீரர்களாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை தாண்டியுள்ளனர். முன்னதாக இந்திய முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இணைந்து இந்த சாதனையை செய்துள்ள நிலையில், இரண்டாவது கூட்டணியாக ரோகித் மற்றும் ஷிகர் தற்போது இந்த சாதனையை எட்டியுள்ள இரண்டாவது துவக்க வீரர்கள் என்ற சாதனையை செய்துள்ளனர்.