உலகக்கோப்பை இறுதிப் போட்டி
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரு அணிகளும் 241 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. அடுத்து வெற்றியை நிர்ணயிக்க நடைபெற்ற சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் தலா 15 ரன்கள் எடுக்க அதுவும் டை ஆனது.
வெற்றியை தீர்மானித்த பவுண்டரி
ஐசிசியின் சர்ச்சைக்குரிய விதியின் படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களிலும், சூப்பர் ஓவரிலும் சேர்த்து எந்த அணி அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூசிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்து இருந்தன.
சச்சின் கருத்து என்ன?
இது பற்றி சச்சின் கூறுகையில், "இரு அணிகளும் அடித்த பவுண்டரிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதை விட, இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தி இருக்கலாம் என நான் கருதுகிறேன். உலகக்கோப்பை இறுதிப் போட்டி மட்டுமல்ல. ஒவ்வொரு விளையாட்டும் முக்கியம். கால்பந்தில், அணிகளுக்கு கூடுதல் நேரம் கொடுப்பது போல, வேறு எதுவுமே முக்கியமல்ல" என்றார்.
விரக்தியில் நியூசிலாந்து
இந்த சர்ச்சையில், கடுமையாக பாதிக்கப்பட்டது நியூசிலாந்து அணி தான். தோல்வியே அடையாமல் உலகக்கோப்பையை இழந்தது. அம்பயர்கள் அளித்த இரண்டு தவறான எல்பிடபுள்யூ தீர்ப்புகள், ஓவர்த்ரோவுக்கு கூடுதலாக 1 ரன் கொடுக்கப்பட்டது என அனைத்து மோசமான நிகழ்வுகளுக்கு பின்னும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அந்த அணி தோல்வி அடையவில்லை. ஆனால், இங்கிலாந்து அணிக்கு பவுண்டரியை கணக்கில் காட்டி உலகக்கோப்பையை வழங்கியது ஐசிசி.
ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?
சச்சின் போன்ற ஜாம்பவான்கள், முதல் தற்போது கிரிக்கெட் ஆடு வரும் வீரர்கள் வரை அனைவரும் பவுண்டரி மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவது தவறு என கூறிய நிலையில், ஐசிசி இனி வரும் காலத்திலாவது தன் விதிகளை மாற்றி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.