டெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்தமன் சாகாவுக்கு மான்செஸ்டரில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தற்போது பிசிசிஐ கூறியுள்ளது. அவருக்கு உண்மையில் என்ன பிரச்னை என்பது குறித்து பல்வேறு குழப்பமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றபிறகு, டெஸ்ட் போட்டிக்கான அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார் விருத்தமன் சாகா.
தற்போது இங்கிலாந்தில் நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காயத்தின் வீரியம் அதிகமானதால், அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். தற்போது கேஎல் ராகுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின்போது சாகாவுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதில் இருந்து தேறியதால், இங்கிலாந்துக்கான டெஸ்ட் அணியில் அவர் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அப்போது தசைப் பிடிப்பு இருந்ததாகக் கூறப்பட்டது. அப்போதே தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிக்சை பெற்றபோது, தனது வலது கை தோள்பட்டையில் வலி இருப்பதாக சாகா கூறியுள்ளார்.
அதற்காக சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் தோள்பட்டையில் ஏற்பட்ட பாதிப்புக்காக அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், மான்செஸ்டரில் இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் துவக்கத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தேசிய கிரிக்கெட் அகாதெமி தற்போது கூறியுள்ளது.
அதனால், அடுத்த சில மாதங்களுக்கு சாகாவால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாகாவின் உண்மையான பிரச்னை என்பது குறித்து ஏன் சரியாக கணிக்கவில்லை, சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதில் பல்வேறு குழப்பமான தகவல்களை தெரிவித்தது ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.