இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நவம்பரில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடருக்கு இந்திய இனிமேல் தான் தயார் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே அந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகமும் உள்ளது.
டெஸ்ட் அணி
இதற்கிடையே, இந்திய டெஸ்ட் அணி தேர்வு குறித்த விவாதம் துவங்கி உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேஎல் ராகுல் அபாரமான பார்மில் இருக்கும் நிலையில் அவரை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.
ரஹானே பார்ம்
துவக்க வீரர்களாக ஆட பலர் அணியில் இருக்கும் நிலையில், மிடில் ஆர்டரில் மட்டுமே அவரை ஆட வைக்க வாய்ப்பு உள்ளது. அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே சில போட்டிகளில் ரன் குவித்தாலும் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை என்ற புகார் உள்ளது.
வாய்ப்பை இழந்த கேஎல் ராகுல்
எனவே, அவரது இடத்தில் கேஎல் ராகுலை ஆட வைக்கலாமா? என சில ரசிகர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். கேஎல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே பல வாய்ப்புகளை பெற்று அதில் தன் பார்மை நிரூபிக்க முடியாமல் வாய்ப்பை இழந்தவர்.
மஞ்ச்ரேக்கர் கருத்து
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது பற்றி கூறுகையில், ரஹானே தன் முதல் இரண்டு வருடங்கள் போல இப்போது ஆடவில்லை. அவர் அப்படி ஒரு ஆட்டம் ஆடுவதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால், ராகுல் எடுத்த ரன்களை வைத்து பார்த்தால் அவர் இன்னும் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் ஆட தயார் ஆகவில்லை என்றார்.
உள்ளூர் போட்டிகளில்..
மேலும், மயங்க் அகர்வால் போல ராகுல் உள்ளூர் போட்டிகளில் ஆடி நிறைய ரன்கள் குவித்து, இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றார். டி20, ஒருநாள் போட்டிகளில் ரன் குவித்தாலும் டெஸ்ட் அணியில் ராகுலை அவசரப்பட்டு சேர்க்கக் கூடாது என கூறுகிறார் மஞ்ச்ரேக்கர்.
ரஹானே நீடிக்கலாம்
அதே சமயம், தன் இயல்பான பார்மில் இல்லை என்றாலும் சராசரியாக ரன் குவித்து வரும் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே தொடர்ந்து அதே ஐந்தாம் வரிசை பேட்டிங்கில் ஆடலாம் எனவும் கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.