அசத்திய பவுலர்கள்
கடந்த போட்டியில் 5 ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே இழந்தது. இன்று கொஞ்சம் பொறுமையாக ஆட முற்பட்டு 12 ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வளவு தான் வித்தியாசம். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அபாரமாக பந்தவீச, சுழற்பந்துவீச்சாளர்களான அக்சர், குல்தீப், தீபக் ஹூடா ஆகியோரும் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விடாமல் கட்டிப் போட்டனர்.
161 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
நடுவரிசையில் ஜிம்பாப்வே அணியின் வில்லியம்ஸ் மட்டும் பொறுப்பாக விளையாடி 42 ரன்கள் அடித்தார். அவருக்கு பக்க பலமாக ரியான் 39 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், ஜிம்பாப்வே அணி இம்முறை 38.1வது ஓவரிலேயே 161 ரன்களுக்கு சுருண்டது. ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுளை வீழ்த்த எஞ்சிய அனைவரும் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ராகுல் ஏமாற்றம்
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேஎல் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான் மற்றும் சுப்மான் கில் ஜோடி பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தவான், சுப்மான் ஆகியோர் தலா 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
சஞ்சு சாம்சன் அபாரம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 6 ரன்களில் வெளியேற, இளம் வீரர் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி நிதானமாக விளையாடி அணியை கரை சேர்த்தது. தீபக் ஹூடா 25 ரன்களில் வெளியேற,கடைசி வரை களத்தில் நிக்னற சஞ்சு சாம்சன் 43 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் தொடரை 2க்கு0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, தொடர்ந்து 14வது முறையாக ஜிம்பாப்வேவை ஒருநாள் போட்டியில் வீழ்த்தி உள்ளது.