வாயை மூடிக் கொண்டு பேசவும்.. "கோச்" ஆனால் ஷேவாக்குக்கு பிறப்பிக்கப்படும் முதல் உத்தரவு இதுதானாம்!
மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஒரு வேளை வீரேந்திர ஷேவாக் நியமிக்கப்பட்டால் கேப்டன் உள்ளிட்ட யாருனும் மோதக் கூடாது. அவர்கள் சொல்படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று ஒரு செய்தி உலா வருகிறது.
ஷேவாக்குக்கு மட்டுமல்லாமல் இனிமேல் யார் பயிற்சியாளராக வந்தாலும் சரி, கேப்டன் மற்றும் அணியினருடன் மோதும் போக்கில் ஈடுபடக் கூடாது. முடிந்தவரை கப்சிப்பென்று வேலையைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
புதிய பயிற்சியாளர் போட்டியில் ஷேவாக் முன்னணியில் இருக்கிறார். ரவி சாஸ்திரியும் களத்தில் இருக்கிறார். யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. இவர்கள் தவிர டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், தொட்டகணேஷ், ரிச்சர்ட் பைபஸ் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

வாயில் பிளாஸ்திரி
கோச் யாராக இருந்தாலும் சரி முதலில் அவர்களுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவே வாயை மூடிக் கொண்டு பேசவும் என்பதுதான் என்று சொல்கிறார்கள். குறிப்பாக ஷேவாக் வந்தால் நிச்சயம் அவருக்கு வாய்க் கட்டுப் போட்டு விட்டுத்தான் வேலையில் சேரவே அனுமதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பட்டுன்னு பேசப்படாது
ஷேவாக் படபடவென்று மனதில் பட்டதை தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விடக் கூடியவர். எனவே இவர் எப்படி கோஹ்லியுடன் செட்டாவார் என்பதுதான் பலரது கவலையாக உள்ளது.

தேவையில்லாத பேச்சுக்கள் கூடாது
மேலும் கேப்டன் மற்றும் வீரர்களை எரிச்சலுக்குள்ளாக்கும்படியான தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்குமாறும் பயிற்சியாளராக வருபவருக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாம். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பட்டியல் போட்டு புதிய தலைமைப் பயிற்சியாளர் கையில் கொடுக்கவுள்ளனராம்.

சிக்கப் போவது யாரோ?
உண்மையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் - கேப்டன் உறவு என்பது மாமியார், மருமகள் உறவு மாதிரிதான் ஆகி விட்டது சமீப காலமாக. கேப்டன் மாமியாரிடம் சிக்கப் போகும் மருமகள் யார் என்பதுதான் அனைவரின் கவலையாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications