சூப்பர் ஓவர் குறித்து ராஸ் டெய்லர்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் போட்டி டிரா ஆகும்பட்சத்தில் சூப்பர் ஓவர் வைக்கப்படுகிறது. ஒரு ஓவரில் விளையாடும் வீரர்கள் அந்த போட்டியின் வெற்றியை நிர்ணயிக்கும்வகையில் இது அமைந்துள்ளது. ஆனால் நியூசிலாந்து அணிக்கும் சூப்பர் ஓவருக்கும் எப்போதுமே ஒத்து வருவதில்லை. இதுவரை 8 முறை அவ்வாறு விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 7 முறை தோல்வியையே கண்டுள்ளது.
சூப்பர் ஓவருக்கு தேவையில்லை
சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடிய டி20 போட்டியிலும் சூப்பர் ஓவர் வைக்கும் சூழல் ஏற்பட்ட போது நியூசிலாந்து இந்தியாவிடம் தோல்வியையே தழுவியது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சூப்பர் ஓவருக்கான தேவையில்லை என்று நியூசிலாந்தின் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஓவர் வைக்கப்படலாம்
குறுகிய ஓவர்களில் விளையாடப்படும் டி20 போட்டிகளில் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் வைக்கப்படுவது போல சூப்பர் ஓவர் வைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ள ராஸ் டெய்லர், ஆனால் ஒருநாள் போட்டிகளில் 100 ஓவர்களை முடித்துவிட்டு போட்டி டை ஆகும்நிலையில், மீண்டும் சூப்பர் ஓவரை வைப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
கோப்பையை பகிர்ந்தளிக்கலாம்
ஒருநாள் போட்டிகளில் சூப்பர் ஓவரை வைப்பதை காட்டிலும், கோப்பையை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிப்பது நல்ல பலனை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த போட்டியை முடிக்க முயற்சி செய்யலாம் என்றும் டெய்லர் அறிவுறுத்தியுள்ளார்.