லண்டன்: இந்தியா, நியூசி. போட்டியை முன்னிட்டு நிகழ்ந்த பயிற்சியில் மைதானத்தில் ஷிகர் தவான் இறுக்கமான முகத்துடன் உலா வரும் வீடியோ ரசிகர்களை உருக வைத்திருக்கிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை போட்டியின் போது, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவு என்பதால், அடுத்த சில வாரங்கள் அவரை விளையாட்டில் இருந்து விலக்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இந் நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா மோதுவதற்கான பயிற்சி நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்றது. அந்த மைதானத்தில், வலிகளுடனும், ரணங்களுடனும் ஷிகர் தவான் நடந்து செல்லும் காட்சிகள், மனதை உருக்க வைக்கின்றன.
அதே சமயம்,காயமடைந்த தொடக்க வீரர் ஷிகர் தவானை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கு 10 முதல் 12 நாட்களாவது தேவைப்படும் என்றார்.
முன்னதாக, மாற்று வீரராக, ரிஷப் பன்ட்டை கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு அனுப்புகிறது. அவர் விரைவில் அங்கு சென்று சேர்கிறார். ரிஷப்பை அதிகார பூர்வ மாற்று வீரராக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்க வில்லை.
ஒரு வேளை அப்படி அறிவித்தால், தவான் விரைவில் குணம் அடைந்தாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாது. அணியில் உள்ள மற்ற வீரர் யாராவது காயமாகி வெளியேறினால், தான் அவரை அணியில் மீண்டும் சேர்க்க முடியும் என்பதால், ரிஷப்பை மாற்று வீரராக அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுலை, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 4வது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனாலும், இது குறித்த உறுதியான தகவலை இந்திய அணி நிர்வாகம் வெளியிட வில்லை.