டி20 போட்டிகளில் 2000 ரன்கள் குவித்தார் சோயப் மாலிக்
ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான டி20 போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்.
பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இங்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் அது பங்கேற்கிறது. முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் மோதின.

ஹராரேவில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வேவை 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 182 ரன்களை எடுக்க, அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 104 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 24 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். இதன்மூலம் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை தாண்டினார். 2000 ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும் 2000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும் இவருக்கே உரித்தானது.

99 போட்டிகளில் விளையாடியுள்ள மாலிக் , 92 இன்னிங்சில் விளையாடி 2027 ரன்களை குவித்துள்ளார். சராசரி 31.65 ஆகும். இதில் 7 அரை சதங்கள் அடங்கும்.
முதல் இரண்டு இடங்களில் நியூஸிலாந்து அணி வீரர்கள் மார்ட்டின் குப்தில் மற்றும் ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் உள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 1992 ரன்களை குவித்து நான்காவது இடத்திலும், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 1949 ரன்கள் குவித்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் வரவிருக்கும் இங்கிலாந்து தொடரில் இச்சாதனையை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Monday, July 2, 2018, 11:31 [IST]
Other articles published on Jul 2, 2018


Click it and Unblock the Notifications