2019 உலகக்கோப்பை
மூத்த வீரர் தோனி 2019 உலகக் கோப்பை தொடரில் தான் கடைசியாக இந்திய அணிக்கு ஆடினார். அதன் பின் தோனி, கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத ஓய்வு எடுத்துக் கொண்டார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தது.
மோசமான செயல்பாடுகள்
2019 உலகக் கோப்பையில் தோனி ஓரளவு ரன் குவித்தாலும், அவரது பேட்டிங் செயல்திறன் குறைந்து விட்டது என்றும், அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தோனி அனுபவம்
எனினும், கேப்டன் விராட் கோலி மற்றும் இளம் பந்து வீச்சாளர்களுக்கு தோனி தனது அனுபவம் மூலமும், எதிரணியை கணிக்கும் திறன் மூலமும் பெரிய அளவில் உதவி செய்தார். தோனி இருந்ததால் வீரர்கள் அழுத்தமான நேரங்களில் நம்பிக்கையுடன் ஆடினர்.
எதிர்காலம் என்ன?
ஆனால், உலகக்கோப்பை தொடருக்குப் பின் அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. தோனி ஓய்வு அறிவிக்கப் போகிறார் என நீண்ட காலம் கூறப்பட்டு வந்து பின் அந்த வதந்தி அடங்கியது. அவரது எதிர்காலம் குறித்த கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
கங்குலி தகவல்
இந்த நிலையில் தான், பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஏற்கனவே தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம், தோனி பேசிவிட்டார் என கூறி இருக்கிறார்.
என்ன சொன்னார் கங்குலி?
கங்குலி கூறுகையில், "தோனி, கேப்டனுடன் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அவர் தேர்வுக் குழுவுடனும் தொடர்பு கொண்டு இருக்கிறார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இது குறித்து விவாதிக்க இது சரியான தளம் அல்ல" என்று கங்குலி இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது கூறினார்.
அது கடினம்
தற்போது விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் சரியாக செயல்படவில்லை என்ற பேச்சு இருக்கும் நிலையில், தோனி அளவுக்கு திறமை வாய்ந்த ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம் என்று கங்குலி கூறினார்.
தோனி என்ன செய்யப் போகிறார்?
மேலும், "நீங்கள் மிக விரைவில் மற்றொரு தோனியை பெற மாட்டீர்கள், ஆனால், அவர் என்ன செய்யப் போகிறார்? அவர் விளையாட விரும்புகிறாரா அல்லது அவர் விளையாட விரும்பவில்லையா என்பது அவரிடம் தான் உள்ளது" என்றார் கங்குலி.
கேள்வி
தோனி இதுவரை தனது எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசவில்லை. முன்னதாக மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தோனி கிரிக்கெட்டுக்கு திரும்புவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.
2020 ஜனவரி
அப்போது, 2020 ஜனவரி மாதம் வரை எதுவும் கேட்காதீர்கள் என கூறியிருந்தார். புது வருடத்தில் தோனி ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?