கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகவும் முன்னெச்சரிக்கையாக நடந்து வருகிறது. மேலும், இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்தியா பாதுகாப்பாக இருந்தாலும், கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. விளையாட்டுகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அறிவிப்பு
வியாழன் அன்று வெளியான மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் அனைத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சி மையங்களை மூடி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
இது குறித்து பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நாங்கள் எந்த வீரர் அல்லது பயிற்சி உதவியாளர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லாமல் இருப்பதை உறுதி செய்துள்ளோம். கூட்டமாக கூடுவதை தடை செய்துள்ளோம். பயிற்சி மையங்களில் உள்ள விடுதிகளை கூட மூடி விட்டோம்" என்றார்
விதிவிலக்கு
மேலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் ஆகி வருபவர்கள், அதற்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார் அமைச்சர். அந்த பயிற்சி மையங்களிலும் வெளி நபர்கள் உள்ளே வருவதை தடை செய்துள்ளோம் என்றார்.
ஐபிஎல் நிலை
ஐபிஎல் போட்டிகள் நடக்குமா? என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஏப்ரல் 15க்கு பின் அரசு புதிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை சூழ்நிலைக்கு ஏற்ப அறிவிக்கும். பிசிசிஐ கிரிக்கெட்டை மட்டும் தான் கண்காணிக்கிறது. அது ஒலிம்பிக் விளையாட்டு அல்ல" என்றார்.
மக்கள் முக்கியம்
மேலும், "இங்கே ஒரு விளையாட்டுத் தொடர் குறித்து மட்டும் கேள்வி எழக்கூடாது. குடிமக்களின் பாதுகாப்பு பற்றியே நாம் கேள்வி கேட்க வேண்டும்" என்றார் அமைச்சர் கிரண் ரிஜிஜு. ஆக, ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15க்கும் பின் துவங்குவதிலும் சிக்கல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.