58 ரன்களுக்கு 5 விக்கெட்
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இலங்கை அணி வீரர்கள் குசேல் மெண்டிஸ் மற்றும் நிசாங்கா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவர் வீசிய நஷிம் ஷா அனல் பறக்கும் வகையில் பந்துவீசினார். ஆட்டத்தின் 3வது பந்தில் நஷிம் குசேல் மெண்டிசின் ஸ்டம்பை பதம் பார்த்தார். இதனையடுத்து நிசாங்கா 8 ரன்ககளிலும், குணதிலகா 1 ரன்களிலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி சிங்க பாய்ச்சலை வெளிப்படுத்தியது, கடுமையாக போராடிய தனஞ்செய்யா 28 ரன்களும், கேப்டன் ஷனாகா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இலங்கை கம் பேக்
இதனையடுத்து பாகிஸ்தான் எளிதாக வென்றுவிடும் என நினைத்த நிலையில் தான், ஆட்டம் அப்படியே தலைக்கீழ் மாறியது. ஐபிஎல் வீரர் பனுகா ராஜபக்சா முதலில் நிதானமாக விளையாட, பிறகு அதிரடியை காட்டினார். ஹசரங்கா 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். மறுபுறம் ராஜபக்சா 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசி 5 ஓவரில் 53 ரன்கள் விளாசப்பட்டது. இதில் கடைசி 2 பந்துகள் 10 ரன்கள் அடிக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. ராஜபக்சா 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
சொதப்பிய பாகிஸ்தான்
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபக்கர் ஷமான் கோல்டன் டக் ஆனார். ரிஸ்வான், இஃப்திகார் ஜோடி பொறுப்பாக விளையாடிய நிலையில், இஃப்திகார் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஸ்வான் 55 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது.
இலங்கை சாம்பியன்
முகமது நவாஸ், குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி ஆகியோர் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷதாப் கான் 8 ரன்கள், ஹரிஸ் ரவுஃப் 13 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 147 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி வீரர்கள், மைதானத்தில் வெற்றியை கொண்டாடினர்.