வரும் 8ம் தேதி துவக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேல் முடங்கியுள்ள சர்வதேச கிரிக்கெட் முடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த முடக்கத்திற்கு பிறகு வரும் 8ம் தேதி இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி துவங்கவுள்ளது. பயோ செக்யூர் முறையில் நடத்தப்படவுள்ள இந்த போட்டியில் எச்சில் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேப்டனாகிறார் ஸ்டோக்ஸ்
தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறப்பையொட்டி, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் , இந்த தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டரும் துணை கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்படுவார் என்று இசிபி அறிவித்துள்ளது.
நாசர் ஹுசைன் சான்றிதழ்
இதனிடையே, பென் ஸ்டோக்ஸ், விராட் கோலியை போன்று செயல்படுபவர் என்றும், அவர் மிகச்சிறந்த கேப்டனாக விளங்குவார் என்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அவர் எந்தவிதமான ஆடம்பரத்தையும் கொண்டவர் இல்லை என்பதால் கேப்டன் பொறுப்பிற்கு மிகச்சிறந்த சாய்ஸ் என்றும் ஹுசைன் கூறியுள்ளார்.
பொறுப்பு வழங்குவது சரியல்ல
ஆனால் தற்போதைய சூழலில் அனைத்து வடிவங்கள் மற்றும் ஐபிஎல் போன்றவற்றில் ஸ்டோக்ஸ் பிசியாக விளையாடிக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள ஹுசைன், ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்சிற்கு வேளைப்பளு அதிகமாக உள்ளநிலையில் முழுநேர கேப்டன் பொறுப்பை அவருக்கு வழங்குவது சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.