உலகக்கோப்பைக்கு பின்..
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறிய நிலையில், அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணித் தேர்வு நடைபெற்றது. அதில் பல குழப்பங்கள் அரங்கேறின. பல முடிவுகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
கேப்டன் குழப்பம்
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார். கோலி ஓய்வில் இருப்பார் என கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் கோலி அணிக்கு திரும்பினார். எந்த கேள்வியும் இன்றி டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
கவாஸ்கர் கேள்வி
இந்த நிலையில் கவாஸ்கர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். கோலி உலகக்கோப்பை வரை தான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் முதன் முதலில் ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது அப்படி தான் கூறப்பட்டதாக நினைவில் உள்ளது என்றார்.
மறுநியமனம் செய்யவில்லை
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணித் தேர்வின் போது கேப்டனை மறுநியமனம் செய்யாமல் நேரடியாக மூன்று அணிகளுக்கும் அவர் தான் கேப்டன் என அவர் விருப்பப்படியோ, தங்கள் விருப்பப்படியோ அறிவித்துள்ளார்கள். ஐந்து நிமிடமாவது ஒதுக்கி கேப்டனை அவர்கள் நியமிக்க பேசி இருக்க வேண்டும் என்று கூறினார் கவாஸ்கர்.
அந்த கமிட்டி வாத்துக்கள்
இந்திய தேர்வுக் குழு கமிட்டி நகர முடியாத வாத்துக்கள். கேப்டனை நியமித்த உடன் அவர்கள் அவரை அழைத்து அணித் தேர்வு குறித்து பேசி இருக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறையை அவர்கள் ஒதுக்கித் தள்ளி விட்டு, உலகக்கோப்பையில் எதிர்பார்த்த படி சரியாக செயல்படாத தினேஷ் கார்த்திக், ஜாதவ்வை நீக்குவது பற்றி தகவல் கூறி இருக்கிறார்கள்.
தப்பு
ஆனால், கேப்டன் பதவியில் எதிர்பார்த்த படி சரியாக செயல்படாத, உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை கூட அணியை அழைத்துச் செல்லாதவரை கேப்டனாக தொடர வைத்துள்ளார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இது தான் கடைசி
மேலும், இந்த கமிட்டிக்கு இது தான் (வெஸ்ட் இண்டீஸ் தொடர்) கடைசி அணித் தேர்வு. புதிய கமிட்டி விரைவில் நியமிக்கப்பட உள்ளது. புதிதாக வரும் குழு எளிதாக தாக்குதலுக்கு உள்ளாகாமல், அணி நிர்வாகத்திடம் உங்கள் வேலை நாங்கள் தேர்வு செய்யும் அணியை வைத்துக் கொண்டு விளையாடுவது மட்டுமே என கூறுவது தான் என கூறுவார்கள் என நம்புகிறேன் என்றார்.
அனுபவம் இல்லாத தேர்வுக் குழு
தற்போது இருக்கும் இந்திய தேர்வுக்குழு உறுப்பினர்கள் பத்து, இருபது சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாதவர்கள் என்பதை பலரும் விமர்சித்து வந்த நிலையில் கவாஸ்கர் போட்டுத் தாக்கி இருக்கிறார்.