நீதிமன்ற அவமதிப்பு
ஐசிசிக்கு அனுராக் தாக்கூர் கடிதம் எழுதி, லோதா கமிட்டி பரிந்துரை குறித்து புகார் கூறியிருந்தார். இதை நீதிமன்ற விசாரணையின்போது தாக்கூர் மறுத்தார். எனவே பொய் தகவலை அளித்ததாக உச்சநீதிமன்றம் தாக்கூர் மீது குற்றம்சாட்டியுள்ளது.
உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடர கூடாது என்றும் அனுராக் தாக்கூரிடம் அது கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தாக்கூர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குழு அமைப்பு
மேலும், மூத்த வழக்கறிஞர்கள் ஃபாலி எஸ்.நாரிமன் மற்றும் கோபால் சுப்பிரமணியன் ஆகியோரை ஆலோசகர்களாக நியமித்துள்ள உச்சநீதிமன்றம், பிசிசிஐயை நிர்வகிக்க தகுதியான நபர்களை சிபாரிசு செய்ய அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இவர்கள் பரிந்துரை அளித்ததும், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பிசிசிஐக்கு தலைவரும், செயலாளரும் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்புலம்
பிசிசிஐயின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு அளிக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் அளித்தது. ஆனால், இந்த பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பு தெரிவிப்பதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு அறிக்கை அளித்தது.
பிசிசிஐ மறுப்பு
இந்த நிலையில்,இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ள பிசிசிஐ, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. மேலும், பிசிசிஐ கிரிக்கெட் சங்கம் தமிழ்நாடு சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளளது. சொசைட்டின் சட்டத்தின் கீழ் எந்த திட்டமும் செயல்படுத்த வேண்டும் என்றால் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் லோதா குழுவின் பரிந்துரைகள் சில ஓட்டெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிராகரித்துள்ளன. எனவே, லோதா கமிட்டியின் பரிந்துரகளை அமல்படுத்தவில்லை என கூறுவது தவறு. லோதா கமிட்டி குற்றச்சாட்டில் உண்மையில்லை லோதா கமிட்டி அனுப்பிய மெயிலுக்கு பதில் அனுப்பவில்லை என்பதில் உண்மையில்லை. 40 மெயில்களை அனுப்பியுள்ளோம், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.