டெஸ்ட் கிரிக்கெட் மாறும்
எனினும், 2010 முதல் 2019 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த மாற்றங்கள் காரணமாக, 2020க்கு பின் டெஸ்ட் போட்டிகள் தன் பழைய தூய்மையான வடிவத்தில் இருந்து அதிகமாக மாறும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பகல் இரவு டெஸ்ட்
2010 முதல் 2019 வரையிலான இந்த பத்தாண்டுகளில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு, விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் அந்த போட்டிகள் நடந்துள்ளன. ஆனால், 2020க்கு பின் நாம் அதிக பகல் - இரவு டெஸ்ட் போட்டியைக் காணப் போகிறோம்.
வேறு வடிவம்
அது டெஸ்ட் போட்டி அணுகுமுறையை பெரிதாக மாற்றும். சிலர் பகல் - இரவு நேரம் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்துகள் காரணமாக அது வேறு ஒரு டெஸ்ட் வடிவம் என்றும் கூறுகிறார்கள்.
மாற்று வீரர்
2019ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ள மாற்று வீரர் விதி மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் காயம் அடைந்து பாதி போட்டியில் ஆட முடியாத நிலைக்கு செல்லும் வீரருக்கு மாற்றாக, வேறு வீரரை ஆட வைக்கலாம்.
12 வீரர்கள் பேட்டிங்
இந்த விதி அமலுக்கு வந்த சில மாதங்களில் பல போட்டிகளில் நாம் 12 வீரர்கள் பேட்டிங் செய்ததை பார்த்து விட்டோம். 2020க்குப் பின் பல போட்டிகளில் இதை அதிகமாக பயன்படுத்தக் கூடும்.
2 பந்துகள்
கடந்த பத்தாண்டுகளில் தான் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் என்ற முறை வந்தது. அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ரிவர்ஸ் ஸ்விங் என்ற வேகப் பந்துவீச்சு கலையை அழித்தது.
எளிதாக மாறிய வேகப் பந்துவீச்சு
இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்ஸ்மேன்கள் வேகப் பந்துவீச்சை எளிதாக கையாளும் போக்கு அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
டி20 கிரிக்கெட்
கடந்த பத்தாண்டுகளில் டி20 போட்டியின் வளர்ச்சி அசுரத்தனமானது. அதனால், பல இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் கூட டி20 போட்டிகள் போல அடித்து ஆட ஆசைப்பட்டு ஆட்டமிழந்து வருகிறார்கள். இந்தப் போக்கால் டெஸ்ட் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுழற் பந்துவீச்சாளர்கள் நிலை
அதே போல, 2010க்கு முன் வரை டெஸ்ட் போட்டிகளில் உலகம் முழுவதும் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், சக்லைன் முஷ்டாக், ரங்கனா ஹெராத் என பலர் உள்ளனர்.
கேள்விக் குறி
ஆனால், இன்று சுழற்பந்துவீச்சாளர்களில் அஸ்வின், ஜடேஜா, நாதன் லியோன் என விரல் விட்டு எண்ணும் அளவிலான வீரர்களே டெஸ்ட் போட்டிகளில் பெயர் பெற்று விளங்குகிறார்கள். அவர்களின் காலத்திற்குப் பின் அடுத்த தலைமுறை சுழற் பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.