திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டித்தொடர் நடைபெறும் மைதானங்களில் ஒன்று நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானமாகும். திண்டுக்கல் நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுற்றிலும் இயற்கை வனப்பு சூழ்ந்த பிரதேசம்.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திலேயே ஆயிரம் பிரச்சினை. இதில் கிராமப்புறத்தில் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம்.. அது எப்படி இருக்கப்போகிறதோ.. குண்டும் குழியுமாக செம்மண் காடாக இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் புண்ணியத்தால், நாடு முழுக்க நமது மானம் கப்பலேற போகிறது என்றுதான் தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்திருந்தார்கள்.
ஆனால், முதல் போட்டியின்போது அந்த ஸ்டேடியத்தை டிவியில் பார்த்தவர்கள் வாயடைத்துப்போனார்கள். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தைவிடவும் அழகாக இருந்தது என்.பி.ஆர் ஸ்டேடியம். அவ்வளவு ஏன், மெல்பர்ன் கிரிக்கெட் மைதானமான எம்.சி.ஜி போன்று இருந்தது அந்த மைதானம். பிட்சும், மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
கிராமப்புற இளைஞர்களுக்கு இதுபோன்ற ஒரு மைதானம் வரப் பிரசாதம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்த மைதானத்தில் இன்று திண்டுக்கல் அணியை எதிர்கொள்ள உள்ள, மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி துணை கேப்டன் சிஜித் சந்திரன் கூறுகையில், ''நத்தம் என்.பி.ஆர். கல்லுாரி மைதானம் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள மலைகளால் இயற்கை காற்று கிடைப்பது பயிற்சிக்கு ஏற்றதாக உள்ளது" என்று சிலாகித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து இந்த மைதானத்திற்கு செல்ல பஸ் கட்டணம் கிடையாதாம். போட்டிக்கான டிக்கெட் இருந்தால் போதும், ஃப்ரீயாக பஸ்சில் செல்ல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த என்.பி.ஆர். கல்லூரி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. ரசிகர்கள் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாமே.