சன்ரைசர்ஸ் வெற்றி
துபாயில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியில் மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் முறையே அவுட் ஆகாமல் 83 மற்றும் 52 ரன்களை அடித்திருந்தனர். இந்த ரன்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வெற்றியை உறுதி செய்தது.
2018க்கு பிறகு அரைசதம்
கடந்த 2018க்கு பிறகு விஜய் சங்கர் அடித்துள்ள அரைசதம் இது. கடந்த ஆண்டில் அவர் அதிகபட்சமாக அவுட் ஆகாமல் 40 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். மேலும் 14 இன்னிங்சில் விளையாடி 244 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனிடையே நேற்றைய இவரது அரைசதம் மிகவும் மெதுவாக அடிக்கப்பட்டது ஆகும். 50க்கும் மேற்பட்ட பந்துகளில் அடிக்கப்பட்டுள்ளது இந்த அரைசதம்.
விஜய் சங்கருக்கு பாராட்டு
ஆயினும் 16 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணி தவித்துக் கொண்டிருந்த நிலையில் மணிஷ் பாண்டேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வழிவகுத்த விஜய் சங்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் 9 ரன்களில் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் விக்கெட்டையும் இவர் வீழ்த்தியுள்ளார்.
விஜய் சங்கர் பெருமிதம்
இந்நிலையில் இந்த அரைசதம் தன்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். தான் சிறப்பாக பௌலிங் செய்ததாகவும், தனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாண்டேவிற்கு நெருக்கடி இல்லாமல் பேட்டிங்கின்போது தான் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.