ஜெயிச்சுட்டோம்… ஆனாலும் அந்த தப்பை பண்ணிட்டோமே…!! எதை சொல்கிறார் இந்த ஆளப்போறான் தமிழன்
ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலும்..அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது தவறு தான் என்று பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறி உள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீசியது. ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர், பெயர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பெயர்ஸ்டோவ் 1 ரன் எடுத்த நிலையில் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். வார்னருடன் விஜய்சங்கர் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

151 ரன்கள் இலக்கு
அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருக்கும்போது விஜய் சங்கர் 27 பந்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வார்ணர் 49 பந்தில் அரை சதமடித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது.

நிதான ஆட்டம்
151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் கெயிலும், லோகேஷ் ராகுலும் நிதானமாக ஆடினர். கெயில் 16 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த வந்த அகர்வால், ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர்.

வென்றது பஞ்சாப்
ராகுல் அரை சதம் அடித்தார். அதைத்தொடர்ந்து அகர்வாலும் அரை சதம் அடித்தார். 19.5 ஓவரில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்த ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சிறப்பான வெற்றி
வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது : இன்றைய போட்டி கடைசி வரை சென்றது. இதுபோன்ற போட்டிகள் எப்போதும் சுவாரசியமாக தான் இருக்கும். நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி கிடைத்தது.

ரன்கள் கொடுத்தோம்
இருப்பினும், கடைசி 10 ஓவர்களில் 100 ரன்கள் வரை விட்டுக்கொடுத்தோம். இது நல்லதல்ல. ஏனெனில், 15 ரன்கள் கூடுதலாக சன் ரைசர்ஸ் அடித்திருந்தால் போட்டி அவர்கள் பக்கம் திரும்பி இருக்கும். முஜீப் சிறப்பாக பந்துவீசியினார். அவரின் பந்துவீச்சு இந்தமைதானத்தில் சிறப்பாக அமைந்தது என்று அஸ்வின் கூறினார்.


Click it and Unblock the Notifications