சென்னை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை 5 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஐந்து ஆட்டங்களின் வெற்றியிலும் டாஸ் மிகப் பெரிய பங்கை வகித்துள்ளது. ஐந்து போட்டிகளிலும் டாஸை வென்ற அணி, பவுலிங் தேர்ந்தெடுத்தது, அதேபோல் டாஸ் வென்ற அணியே இதுவரை வென்றுள்ளது.
ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள், 51 நாட்களில், 60 ஆட்டங்களில் விளையாட உள்ளன. இரண்டு ஆண்டுகள் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளன.
இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த அனைத்து போட்டிகளிலும் டாஸை வென்ற அணிகள் பவுலிங்கை தேர்வு செய்தன. அதேபோல் டாஸ் வென்ற அணியே வெற்றியும் பெற்றுள்ளன.
முதலில் நடந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டியில், டோணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்தார். தோல்வி அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடியில் சிஎஸ்கே வென்றது.
இரண்டாவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் டாஸ் வென்றார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக வென்றார். மூன்றாவது ஆட்டத்தில் மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி கூறினார். இந்தப் போட்டியில் சுனில் நரேன் அதிரடியாக விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியிலும் ஐதராபாத் டாஸ் வென்றது. கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வென்றது.
நேற்று இரவு நடந்த சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திலும் கேப்டன் டோணி டாஸ் வென்று, கொல்கத்தாவை பேட்டிங் செய்யும்படி கூறினார். மிகவும் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே,. கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.