டாக்கா: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில், நேபாளத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஹாட்ரிக் வெற்றியை சுவைத்தது.
குரூப் டியில் இடம் பிடித்துள்ள இந்தியா, ஏற்கனவே அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று, மிர்பூர் நகர ஸ்டேடியத்தில், நேபாளத்தை எதிர்கொண்டது. பனி மூட்டத்தால் ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய பந்து வீச்சை நொறுக்க முடியாத நேபாளத்தால், 48 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 169 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.
இந்திய தரப்பில் அவேஷ் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டாகர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இந்தியா, ஆரம்பம் முதலே அடித்து விளாசியது. இதனால் 18.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 175 ரன்கள் விளாசி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
இந்திய தொடக்க வீரர், ரிஷப் பந்த் 37 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அவுட் ஆனார். குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய ஜூனியர் வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.
மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷான் 52 ரன்கள் எடுத்தார். நேபாளத்தை வீழ்த்தியதன் மூலம், ஹாட்ரிக் வெற்றியை சுவைத்துள்ள இந்திய அணி, குரூப் டியில் முதலிடம் பிடித்துள்ளது. எனவே, காலிறுதி போட்டியில் குரூப் ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த அணியோடு இந்தியா மோதும்.