டெல்லி: மனம் துவண்டு விடாமல் உறுதியுடன் விளையாடுங்கள் என்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
31 வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளன. இந்தியா சார்பில் அதிக வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.

துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, ஹாக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால், துர்திருஷ்டவசமாக இந்திய வீரர்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் பதிவின் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து இந்திய வீரர்களின் கடின உழைப்பை எண்ணி இந்தியா பெருமை அடைகிறது. வெற்றியும் தோல்வியும் வாழ்வில் ஏற்படுவது சகஜம்.
மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துங்கள். முடிவு எது வேண்டுமானால் இருக்கட்டும். மனம் துவண்டு விடாமல் உறுதியுடன் விளையாடுங்கள்.
உங்களின் ஒவ்வொருவரின் பொறுமை, அர்பணிப்பு உணர்வு, உறுதி ஆகியவை எங்களை பெருமை அடைய செய்கிறது.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.