இந்தியா 404 ரன்கள் குவிப்பு
இந்த நிலையில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்திய அணி அதிரடி
இந்திய அணி தரப்பில் புஜாரா 80, ஸ்ரேயாஸ் 86, அஸ்வின் 58 ரன்களை விளாசினார். அதேபோல் ரிஷப் பண்ட் 46 மற்றும் குல்தீப் யாதவ் 40 ரன்கள் சேர்த்தது இந்திய அணிக்கு பெரியளவில் உதவியுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அப்போது சிராஜ் வீசிய முதல் பந்திலேயே வங்கதேச அணியின் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
சிராஜ் - லிட்டன் தாஸ் வாக்குவாதம்
தொடர்ந்து வந்த யாசிர் அலி 4 ரன்களில் ஆட்டமிழக்க, இதன் பின்னர் லிட்டன் தாஸ் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். அஸ்வின் பந்துவீச்சில் இரு பவுண்டரிகளையும், உமேஷ் யாதவ் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகளையும் விளாசினார். இந்த நிலையில் மீண்டும் சிராஜ் பந்துவீச வந்த போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிராஜ் கொடுத்த பதிலடி
சிராஜை பார்த்து லிட்டன் தாஸ், தனது காதில் எதும் விழவில்லை என்று சைகை காட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிராஜ் அடுத்த பந்திலேயே லிட்டன் தாஸை விக்கெட் வீழ்த்தினார். இதன் பின்னர் சிராஜ் தனது வாயில் விரல் வைத்து சத்தம் வரக் கூடாது என்று சொல்லும் வகையில் குட் பை காட்டினார்.
வங்கதேசம் திணறல்
இன்னொரு பக்கம் விராட் கோலி, தனக்கே உரிய பாணியில் லிட்டன் தாஸ் என்ன செய்தாரோ அதையே மீண்டும் செய்து வழியனுப்பி வைத்தார். சிராஜ் மற்றும் விராட் கோலி ஒருவரும் சேர்ந்து லிட்டன் தாஸ்-க்கு குட் பை சொல்லி அனுப்பி வைத்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வங்கதேச அணி 107 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.