டாக்கா: சச்சின் டெண்டுல்கர் யாருடனும் ஒப்பீடு செய்ய முடியாத ஒரு மிக சிறந்த வீரர் என்பதால், அவரை விராட் கோஹ்லியோடு ஒப்பிட வேண்டாம் என்று பாகிஸ்தானின் டி20 அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறினார்.
டி20 ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெறாத நிலையில், அணித்தலைவர் ஷாகித் அப்ரிடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆசிய கோப்பை டி20 தொடரில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பது உண்மைதான்.
உலக கோப்பை டி20 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய வலுமிக்க அணிகள் உள்ள குழுவில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளதால், எங்களுக்கு உலக கோப்பை டி20 தொடரில் சவால் அதிகமாக இருக்கும்.
பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள முகமது அமீர் சிறப்பாக பந்து வீசியது எனக்கும், அணிக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு கைமாறாக அவர் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்துள்ளார்.
விராட் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமாக ஆடும் வீரர். சிறந்த ஆட்ட நுணுக்கங்களையும், போராட்ட திறனையும் வெளிப்படுத்தும் அவர் மிகச் சிறந்த வீரர். ஆனால், அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட கூடாது. இந்தியாவிலும், உலகெங்கிலும் பலருக்கு ஒரு சிறந்த ரோல் மாடலாக விளங்குபவர் சச்சின்.
இருவரும் சிறந்த வீரர்கள் தான் என்றபோதிலும், ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட வேண்டாம். இவ்வாறு ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.