"பேப்பர்"ல போடுறதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே கிடையாது பாஸ்.. கோஹ்லி
மொஹாலி: செய்தித் தாள்களில் வெளியாவதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டு இல்லை. ஐசிசி சொல்வதை மட்டுமே என்னைப் போன்ற கிரிக்கெட் வீரர்கள் மதிக்க முடியும். மதிப்போம். யூகங்களுக்குப் பதில் அளிப்பது கிடையாது. நான் செய்தித் தாள்களும் படிப்பதில்லை என்று பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின்போது பந்தில் சூயிங் கம் எச்சிலைத் தடவி பந்தை சேதப்படுத்தி விட்டார் கோஹ்லி என்று சர்ச்சை கிளம்பியது. ஆனால் போட்டி நடந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் இதுகுறித்துக் கூறப்படுவதால் இதுகுறித்து விசாரிக்க விதிமுறைப்படி இயலாது என்று கூறி விட்டது.
இந்த நிலையில் தன் மீதான புகார் குறித்து விராத் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார். மொஹாலியில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐசிசி சொல்லட்டும்
எனக்கு செய்தித் தாள்களில் வரும் விஷயங்களில் நம்பிக்கை இல்லை. அதை பொருட்படுத்துவதும் இல்லை. நான் பேப்பர் படிப்பதும் இல்லை. ஐசிசி சொல்ல வேண்டும். அதை மட்டுமே நான் மதிக்க முடியும்.

உண்மை இருந்தால்
புகாரில் கொஞ்சமாவது உண்மை இருந்திருந்தால் நிச்சயம் ஐசிசி என்னிடம் விசாரித்திருக்கும். பேசியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது தொடரிலிருந்து எங்களது கவனத்தைத் திசை திருப்ப நடக்கும் முயற்சியாகும்.

ஆஸ்திரேலியாவிலும் நடந்தது
இதுபோன்ற திசை திருப்பும் வேலை தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரின்போதும் கூட நிகழ்ந்தது. ஆனால் இங்கு யாரும் விசாகப்பட்டனம் போட்டி முடியும் வரை இதுகுறித்துப் பேசவே இல்லை.

ஐசிசி முடிவே இறுதியானது
செய்தித் தாள்களின் செய்தியை விட ஐசிசியின் முடிவுதான் இறுதியானது, முடிவானது. அதை மட்டுமே என்னைப் போன்ற வீரர்கள் ஏற்க முடியும். எனவே இதுகுறித்து நான் கவலைப்படவில்லை. சிரித்து விட்டுப் போய் விடுவேன் என்றார் கோஹ்லி.

என்ன செஞ்சேன்
அப்படியும் விடாத இங்கிலாந்து நாட்டு செய்தியாளர் ஒருவர், பாப் டுபிளஸிஸ் செய்ததையே நீங்களும் செய்தீர்களா என்று கேட்டபோது கோஹ்லி பட்டென்று, நான் என்ன செய்தேன் என்று திருப்பிக் கேட்டார். இதற்கு இங்கிலாந்து செய்தியாளர் பதிலளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications