பிரீமியர் ஃபுட்சலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் விராட் கோஹ்லி
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிரிக்கெட் புயல் விராட் கோஹ்லி பாடவிருக்கிறார். ஏ.ஆர். ரகுமானின் இசைக்கு ரசிகரான விராட் கோஹ்லி, கிரிக்கெட் ஆடும் போது ரஹ்மானின் வந்தே மாதரம் பாடல் கேட்டால் எனர்ஜியாக இருக்கும் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கால்பந்து விளையாட்டான 'ஃபுட்சல் லீக்' போட்டிகளை 'பிரீமியர் ஃபுட்சல்' என்ற பெயரில் துவங்க உள்ளனர். அதற்கான அறிவிப்பை வெளியிடும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அந்தப் பாடலை இந்திய டெஸ்ட் கேப்டனும், பிரீமியர் ஃபுட்சல் போட்டிகளின் பிராண்ட் அம்பாசிடருமான விராட் கோஹ்லி, பாட உள்ளார் என்ற அருமையான தகவலை நேற்றைய நிகழ்ச்சியில் கூறினர்.
பிரீமியர் ஃபுட்சல் அமைப்பின் நிர்வாகிகள் பேசும்போது, இந்தியாவில் மிக வேகமாக, வெறும் 15 நிமிடங்களே நடக்கும் இந்த ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், இன்று பெரிய அளவில் இருக்கும் கால்பந்து வீரர்களுக்கு ஃபுட்சல்தான் அடையாளம் தந்தது என்றும் கூறினர். மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த விளையாட்டுக்கான விவரங்கள், வீரர்கள் விவரம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

ரஹ்மானின் ரசிகர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விராட் கோஹ்லி, '' நாங்கள் சிறுவயதில் இருந்து இவரது பாடல்களைதான் கேட்டு வளர்ந்து இருக்கிறோம். அவரது பாடல்கள் இல்லாமல் இளம் வயது கடந்ததில்லை. அவரது இசையில் பாடுவது என்றவுடன் சற்றுப் பயமாகதான் இருந்தது என்றார்.

ஆடுகளத்தில் பயமில்லை
ஆடுகளங்களில் பயந்ததே இல்லை. ஆனால் இவர் இசைக்கு பாடுவது அவ்வளவு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால் எளிமையான வரிகளால் எனது சுமையை ரஹ்மான் சார் குறைத்துவிட்டார் என்று கூறினார்.

ரஹ்மான் பாடல்கள் எனர்ஜி
கிரிக்கெட் போட்டிகளின் போது தேசியக் கீதம் பாடப்படும். அதற்கு பிறகு ஆடும் போது இவரது வந்தே மாதரம் பாடல் தான் கேட்கும். அது தரும் எனர்ஜியை யாராலும் தர முடியாது என ஏ.ஆர் ரஹ்மானை புகழ்ந்து பேசினார் கோஹ்லி.

எளிமையான இசைதான்
ஏ.ஆர்.ரஹ்மான் பேசும் போது, சமீபகாலமாக விளையாட்டுத் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்து வருகிறேன். பிடித்திருக்கிறது அதனால்தான் இதற்கும் ஆர்வத்துடன் சம்மதித்தேன். மேலும் விராட், நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நான் உங்களுக்கு எளிமையாக இருக்குமாறுதான் இசையமைத்துள்ளேன் என்றும் கூறினார்.

சுமாரான பாடகன்
பின்னர் கேள்வி பதில் நேரத்தில், விராட் கோஹ்லியிடம் உங்கள் பாடும் திறன் பற்றி சொல்லுங்கள்? யார் உங்களது ஃபேவரைட் பாடகர்? என்று கேட்கப்பட்டது. நான் சுமாரான பாடகன்தான். மோசமாகப் பாட மாட்டேன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நான் பாடுவேன். எனக்கு பிடித்தப் பாடகர் அரிஜித் சிங். எனக்குப் பாடுவது பிடித்த, மகிழ்ச்சியான விஷயம் என்றார்.


Click it and Unblock the Notifications