டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான வீரேந்திர ஷேவாக் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடைபெற்ற மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடக்க விழாவில் பேசிய ஷேவாக், நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாவிட்டால் மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் விளையாட முடியாது. இந்தியா திரும்பியதும் எனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஷேவாக் ஓய்வு பெற்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தாம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என ஷேவாக் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்தியா திரும்பிய ஷேவாக் தமது ட்விட்டர் பக்கத்தில், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன்.." என்று அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் ஷேவாக். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் கடைசியாக விளையாடினார்.
251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ரன்களைக் குவித்திருக்கிறார் ஷேவாக். அதேபோல் அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்களைக் குவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் மற்றொரு முன்னணி வீரரான ஜாகீர்கான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.