மீண்டும் மீண்டும் முன்வரிசை சொதப்பல்
இந்திய அணி இந்த தொடர் முழுவதும் சந்தித்த பெரிய பிரச்சனை எது என்றால் அது துவக்க வீரர்கள் விரைவில் வெளியேறியது தான். ஒரு போட்டியில் கூட இவர்கள் கூட்டணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மூன்றாம் போட்டியில் மட்டும் துவக்க இணை இரண்டு இன்னிங்க்ஸிலும் 60 ரன்கள் எடுத்தது. ஆனால், அப்போது கூட அவர்களில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. "துவக்க வீரர்கள் சொதப்புவது, பின்வரிசை வீரர்களுக்கு பெரிய அழுத்தமாக அமைந்தது. மீண்டும் மீண்டும் நடந்த இந்த தவறை இந்திய அணி நிச்சயம் ஆலோசிக்கும் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார் விவிஎஸ் லக்ஷ்மன்.
ரிஷப் பண்ட், ராகுல் அருமை
"ஐந்தாம் போட்டியின் கடைசி இன்னிங்க்ஸில் இமாலய இலக்கை துரத்திய இந்திய அணியில், வெற்றி பெற அதிக வாய்ப்பில்லை என தெரிந்து, ரிஷப் பண்ட், ராகுல் சுதந்திர உணர்வில் அருமையாக ஆடினார்கள். இந்த தொடரின் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் நேர்மறை எண்ணத்தை இந்தியா தன் இதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என கூறி இருக்கிறார் லக்ஷ்மன்.
வெற்றியில் பெற வேண்டும்
இந்தியா ஒவ்வொரு போட்டியிலும் சில சமயங்களில் முன்னிலை வகித்தது. எனினும், அது வெற்றியாக மாறவில்லை. இது பற்றி, "இங்கிலாந்து 4-1 என தொடரில் வெற்றி பெற்றாலும், இந்த எண்கள் இரண்டு அணிகளும் எந்த அளவு போட்டி போட்டு ஆடினார்கள் என்பதை கூறாது. மாறாக, இது டெஸ்ட் போட்டியில் ஒரு மணி நேரம் கூட நீங்கள் பந்தை விட்டு உங்கள் கண்களை எடுக்கக் கூடாது என சொல்லும்" என கூறினார் லக்ஷ்மன். மேலும், இங்கிலாந்து அணி மூன்றாம் போட்டியின் தோல்வியில் இருந்து மீண்டு வந்து அடுத்த போட்டியை வென்றது. தொடரை கைப்பற்றிய நிலையிலும், ஐந்தாம் போட்டியில் அதிக உத்வேகம் காட்டி வென்றது. இவற்றைப் பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.
வெற்றியை நோக்கி போகாமல்
"ராகுல் ஆட்டமிழந்த உடன், இந்தியா டிரா செய்ய முயன்றது. ரிஷப் பண்ட் இருக்கும் வரை இந்தியா வெற்றிக்கு தேவையான ரன்களை நோக்கி சென்று இருக்க வேண்டும். கோலியின் முதல் டெஸ்ட் போட்டியான அடிலெயிட் போல இந்தியா செய்து இருக்க வேண்டும். அது தான் இந்த அணியின் குணம்" என தன் கருத்தை கூறினார் லக்ஷ்மன்.