சரிவில் இருந்த இந்திய அணி
90களின் இறுதியில் நிறைய தோல்விகள், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகள் என பெரும் சரிவில் இருந்த இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கை அளித்தது 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டி வெற்றி தான். அப்போது தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற பலமான ஆஸ்திரேலியா இந்தியா வந்தது.
மோசமான தோல்வி
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மோசமாக தோல்வி அடைந்து இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியும் தாங்கள் தான் வெல்வோம் என்ற அலட்சிய எண்ணம் ஆஸ்திரேலிய அணியிடம் தெரிந்தது.
முதல் இன்னிங்க்ஸ் நிலை
கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 445 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த நிலையில் பெரும்பாலான அணிகள் ஃபாலோ ஆன் கொடுக்க மாட்டார்கள்.
ஆஸ்திரேலியா செய்த தவறு
ஆனால், இந்திய அணியை எளிதாக வீழ்த்தலாம், இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தலாம் என எண்ணி ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் கொடுத்தது. இந்திய அணி ஒரே ஒரு மாற்றத்தை செய்தது. அது அந்த டெஸ்ட் போட்டியின் தலைஎழுத்தை மாற்றியது.
அந்த மாற்றம்
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய ஒரே பேட்ஸ்மேன் ஆன லக்ஷ்மனை டிராவிட் களமிறங்கும் மூன்றாம் இடத்தில் இறக்குவது, டிராவிட், லக்ஷ்மன் இடத்தில் ஆடுவது. இது தான் அந்த மாற்றம். எதிர்பார்த்தது போலவே விவிஎஸ் லக்ஷ்மன் இரண்டாவது இன்னிங்க்ஸிலும் ரன் குவித்தார்.
மூன்றாம் நாள் முடிவு
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் லக்ஷ்மன் சதம் கடந்தார். இந்தியா 4 விக்கெட்கள் இழந்த நிலையில், டிராவிட் அப்போது தான் களமிறங்கினார். இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து ஆடி வந்தது.
இன்னும் ஒரு ஓவர்
நான்காம் நாளை கடந்து குறைந்த பட்சம் 300 ரன்கள் முன்னிலை பெற்றால் தான் போட்டியை டிரா செய்ய முடியும். எனவே, விவிஎஸ் லக்ஷ்மன், டிராவிட் விக்கெட் விழாமல் ஆட முடிவு செய்தனர். இருவரும் நான்காம் நாள் முழுவதும், "இன்னும் ஒரு ஓவர்" என ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் சொல்லிக் கொண்டனர்.
சரியான அணுகுமுறை
ஃபாலோ ஆன் பெற்று பின்தங்கிய நிலையில் தோல்வியை தவிர்க்க முடியுமா? என்ற எண்ணத்தை மறந்து, ஆஸ்திரேலியாவின் பலமான பந்துவீச்சு கூட்டணியை மறந்து இன்னும் ஒரு ஓவர் என ஒவ்வொரு ஓவராக அணுகி அந்த நாள் முழுவதும் விக்கெட் விழாமல் ஆடியது லக்ஷ்மன் - டிராவிட் ஜோடி.
இந்தியா ரன் குவிப்பு
நான்காம் நாள் முடிவில் இந்தியா 589 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. லக்ஷ்மன் 275 ரன்களும், டிராவிட் 155 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஐந்தாம் நாள் இந்தியா 7 விக்கெட்கள் இழந்து 657 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இந்தியா வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா தாக்குப் பிடித்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்த்த நிலையில், 212 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி 171 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி மறக்க முடியாத வெற்றி பெற்றது.