மோசமான ஆட்டம்
பாகிஸ்தான் அணி இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் ரொம்பமோசமாக அமைந்தது. உட்கட்சிப் பூசல் போல சீனியர் வீரர்களுக்குள் மோதல், எதிரணிகள் அடுத்தடுத்து வென்றது, உச்சமாக இந்தியாவிடம் தோல்வியுற்றது என கசப்பான பயணமாக மாறிப் போனது.
ஒரு வெற்றி மட்டுமே
பாகிஸ்தான் அணி தான் ஆடிய 4 போட்டிகளில் வங்கதேசத்துடன் நடந்த போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 3 போட்டிகளிலும் அது தோல்வியுற்றது. இதனால் அரை இறுதிக்கான வாய்ப்பைத் தவற விட்டு நாடு திரும்பியுள்ளது.
ரசிகர்கள் கடும் கோபம்
பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது. அத்தோடு, இந்தியாவில் விளையாடும்போது நிறைய அன்பு கிடைப்பதாக அப்ரிதி கூறியது வேறு பாகிஸ்தானில் புயலைக் கிளப்பிவிட்டு விட்டது.
வக்கார் கடும் அதிருப்தி
இந்த நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதில் டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து அவர் விளக்கியுள்ளார். தனது அணியின் செயல்பாடுகள் குறித்து அதில் அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளாராம்.
சொல் பேச்சு கேட்பதில்லை
சீனியர் வீரர்கள் குறித்து வக்கார் கூறுகையில், சில வீரர்கள் யாருடைய சொல் பேச்சையும் கேட்பதில்லை. குறிப்பாக பயிற்சியாளர் சொல்வதை சட்டையே செய்வதில்லை. அவர்கள் கூறும் யோசனைகளை செயல்படுத்த விரும்புவதில்லை.
அப்ரிதி லாயக்கில்லை
கேப்டன் பதவிக்கு ஷாஹித் அப்ரிதி லாயக்கில்லை. அவர் சரியாக இருந்தால் அணியும் சரியாக இருந்திருக்கும் என்று வக்கார் யூனிஸ் கூறியுள்ளாராம்.
விலகத் தயார்
மேலும் தான் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் வக்கார் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது.
மொத்தமாக மாற்றப்பட வாய்ப்பு
இந்த நிலையில் வக்கார் யூனிஸ், அப்ரிதி, சில சீனியர் வீரர்களை மொத்தமாக மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக ஒரு
தகவல் வெளியாகியுள்ளது.