வெளிநாடுகள்
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த ரோஹித் ஷர்மா கூறியது: கடந்த 2 வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல வெளிநாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது.
ஆசிய நாடுகள்
அந்த போட்டிகளில் எல்லாம், இளைஞர்களை உள்ளடக்கிய இந்திய அணி, பாசிட்டிவாகவே ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும். அடுத்த இரு வருடங்களுக்கு, இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள ஆசிய நாடுகளில்தான் அதிக டெஸ்ட் போட்டிகளை இந்தியா விளையாட உள்ளது. இந்த சூழ்நிலை சற்று சவாலாக இருக்கும்.
அனுபவ வீரர்கள்
இந்திய அணியிலுள்ள வீரர்களில் பெரும்பாலானோர் குறைந்தபட்சம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவமாவது உள்ளவர்கள். எனவே, இன்னும் இளைஞர்கள் உள்ள அணி என்ற சாக்கு போக்கை சொல்லிக்கொண்டு, வெளிநாட்டில் கற்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்ற வார்த்தைகளை கூறிக்கொண்டு இருக்க முடியாது. இது ஆற்றலை காண்பிப்பதற்கான தருணம். இவ்வாறு ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.
வொயிட் வாஷ்
அஜிங்ய ரஹானே கூறியது: தற்போதுள்ள டெஸ்ட் அணி, வெளிநாடுகளில் அதிகம் விளையாடி அனுபம் பெற்றுள்ள அணி. எனவே இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகளையும் வென்று, சாம்பியனாக இந்தியா திரும்ப வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
நெருக்கடியில்லை
இலங்கையில் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நெருக்கடியில் விராட் கோஹ்லி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கோஹ்லி எப்போதுமே, நெருக்கடியை தன்மீது சுமத்திக்கொள்ளும் குணாதிசியம் கொண்டவர் இல்லை.
ஸ்பின்னை சமாளிப்போம்
இலங்கை பிட்சுகளில் அந்த நாட்டு ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சிரமமான விஷயம். இருப்பினும் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவருமே ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்பவர்கள்தான். எனவே, ஸ்பின் பெரிய பிரச்சினையாக இருக்காது. இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.