ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பு
சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 15ம் தேதி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் தனது ஓய்வு குறித்து முடிவெடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு என்பதை அறிந்துள்ளனர். இந்நிலையில் வரும் மாதம் 19ம் தேதி யூஏஇயில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக தன்னுடைய சிஎஸ்கே அணி வீரர்களுடன் தோனி அங்கு சென்றுள்ளார்.
மைக்கேல் ஹோல்டிங் வியப்பு
இதனிடையே, என்ன மாதிரியான கிரிக்கெட் கேரியரை தோனி கொண்டிருந்தார் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். போட்டிகளின்போது எந்தவித சூழலிலும் தன்னுடைய பொறுமையை கைவிடாமல் அதை சமாளிக்கும் திறன் தோனிக்கு இருந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
அணி வீரர்கள் சிறப்பாக விளையாட உதவி
எந்த சூழலிலும் அவர் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியதில்லை என்றும் தனது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர்களுடன் சிறிது நேரம் அவர் பேசினால், உடனடியாக அந்த சூழலே மாறிவிடும் என்றும் அந்த அளவிற்கு அவர் சிறப்பானவர் என்றும் ஹோல்டிங் மேலும் கூறினார்.
உடலை பிட்டாக வைத்துக்கொண்ட தோனி
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 5,000 ரன்களை தோனி பெற்றுள்ளதாகவும் அவர் சிறப்பான பேட்ஸ்மேன் இல்லையென்றாலும் இதை அவர் சாதித்துள்ளதாகவும் ஹோல்டிங் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளிலும் கூட குனிந்தபடியே விக்கெட் கீப்பிங்கை பல வருடங்கள் அவர் செய்ததாகவும், உடல் மிகுந்த பிட்டாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.