பிரம்மித்துப் பார்த்தோம்
ஆனால், அந்த சம்பவம் நடந்தது. இந்தியா வென்றது. அதனால் தான் சொல்கிறேன் இது மேஜிக் என்று. கிரிக்கெட்டில் எப்போதாவது இதுபோன்ற மேஜிக்குகள் நிகழும். எப்படி ஒரு மேஜிக் ஷோவை பார்த்து பூரித்து என்ஜாய் செய்கிறோமோ, அதைப் போலவே இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை இந்தியர்களாக, இந்திய ரசிகர்களாக நாம் என்ஜாய் செய்து கொண்டோம். அவ்வளவுதான். மேஜிக் ஷோவை நீங்கள் எவ்வளவு தான் பிரம்மித்துப் பார்த்தாலும், அதில் ஏதோ ஒரு பித்தலாட்டம் உள்ளது என்பது நம் மூளை சொல்லிக் கொண்டே இருக்கும். ஆனால், நம் கண்களும், மனமும் அதை காதில் வாங்கிக் கொண்டே, மேஜிக்கை பிரமித்து பார்த்துக் கொண்டிருக்கும்.
மிகப்பெரிய பிரச்சனை
அப்படி தான் இந்த லார்ட்ஸ் டெஸ்ட் மேட்சும். இந்திய அணி வென்றாலும், அங்கு ஏகப்பட்ட ஓட்டைகள், கோளாறுகள் இருந்தன என்பதே உண்மை. இது முழுமையான வெற்றி என்பதை ஏதோ ஒரு இடத்தில் மூளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. காரணம், இந்திய அணி தனது முழு திறமையை வெளிப்படுத்தவே இல்லை. ஆம்! மீண்டும் சொல்கிறேன் இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்சனை மிடில் ஆர்டர். புஜாரா, கோலி, ரஹானே-வின் ஆட்டங்கள் இன்னும் தடுமாற்றத்தில் தான் இருக்கின்றன. 2வது இன்னிங்ஸில் ரஹானே 61 ரன்கள் அடித்தார். புஜாரா 45 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவருக்கும் நன்றாக தெரியும், தங்கள் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று. அவர்களது ஆட்டத்தில் அந்த எச்சரிக்கை உணர்வு வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியதை நாம் கண் கூடாக பார்த்தோம். அதன் வெளிப்பாடே, இருவரும் சேர்த்து கிட்டத்தட்ட 4 மணி நேரம் களத்தில் நின்று 50 ஓவர்களை சந்திக்க வைத்தது.
மோசமான நிலைமை
இப்படி, தங்களுக்கு.. அணியில் தங்கள் இருப்புக்கு ஆபத்து என்றால் தான் இருவரும் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என்பது தான் இங்கு பிரச்சனை. இந்த ஆர்வத்தை, பயத்தை, எச்சரிக்கை உணர்வை ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலோ, நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலோ அவர்கள் வெளிப்படுத்தவிலை. இது தான் பிரச்சனை. இந்த மனநிலை தான் பிரச்சனை. இது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தங்களது இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கிரிக்கெட் விளையாடினால், அது அணிக்கு எந்த வகையிலும் பயன் தராது. மாறாக, அணியை இந்த மனநிலை ஒரு மோசமான நிலைக்கு தான் இட்டுச் செல்லும்.
சிரமப்படும் கோலி
பிறகு, விராட் கோலி.. மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் சொல்லிவிடுவான், விராட் கோலி இப்போது ஃபார்மில் இல்லை என்று. "கோலி என்ன பேட்டிங் பன்றார்?" என்று சுனில் கவாஸ்கர் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். அந்த அளவுக்கு இருக்கிறது கோலி நிலைமை. சாம் கர்ரன், ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசும் பந்தை மெனக்கெட்டு சென்று மீட் செய்து, எட்ஜ் ஆகி அவுட் ஆகிறார் என்றால், என்னவென்று சொல்வது? ஆண்டர்சன் பந்து வீச வந்தாலே, கோலி பயப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. பந்தை க்ளீயர் செய்வதில் ரொம்பவே சிரமப்படுகிறார்.
எல்லா நேரமும் நடக்காது
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக, லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றியில் நாம் இந்த முக்கிய குறைபாட்டை மறந்துவிட்டோம் எனில், அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் சிக்கலை சந்திக்கப் போவது உறுதி. எல்லா நேரமும் மேஜிக் நடக்காது, மனதில் கொள்ளுங்கள். முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவுக்கு பெர்ஃபார்ம் செய்ததற்கு காரணம் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் - ராகுலும் தான். அதேபோல், லார்ட்ஸ் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் இவர்கள் இருவரால் தான் இந்தியா 350 ரன்களை கடக்க முடிந்தது. இருவரும் இரண்டாம் இன்னிங்சில, விரைவாக அட்டமிழந்ததால், இந்திய அணியின் நிலைமை என்ன ஆனது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். ஷமியும், பும்ராவையும் மேஜிக் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் இது நடக்குமா?
8 மாதங்களுக்கு முன்பு
அதேபோல், ரிஷப் பண்ட் தடுமாறுகிறார் என்றே பார்க்கிறேன். அவர் ஒரு இன்னிங்ஸுக்கு ஒரு பவுண்டரியை இறங்கி வந்து அடித்துவிடுவதால், இன்னமும் அந்த பெயரை வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுவது போல் தெரிகிறது. லார்ட்ஸ் டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் தனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பது தெரிந்தும், மிக சீப்பாக எட்ஜ் ஆகி அவுட்டானார். அவர் சற்று கூடுதலாக புகழப்படுகிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் தனி ஆளாக மேட்சை மாற்றக் கூடிய திறன் உள்ளவர் என்பதை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார். ஆனால் அது மட்டும் போதாது. போட்டிகள் நிறைந்த இந்த கிரிக்கெட் உலகில், ஒவ்வொரு முறையும் ரிஷப் பண்ட் தனது திறமையை வெளிப்படுத்திய ஆக வேண்டும். 8 மாதங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியதை சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டிவிடலாம் என்று நினைத்தால், அது அணிக்கு பேராபத்தாக அமைந்துவிடும்.
ஒரு விக்கெட் கூட
இறுதியில் ஜடேஜா.. அணியில் இவரது இருப்பு அவர் பேட்டிங் செய்ய வரும்போது தான் தெரிகிறது. "ஓ.. ஜடேஜா-ன்னு ஒருத்தர் டீமுல இருக்காருல" என்று நாம் அப்போது தான் உணருகிறோம். அடுத்த நொடி நம் மனதில் தோன்றும் முகம் ரவிச்சந்திரன் அஷ்வின் உடையது தான். ஒரு மிகப்பெரிய வேர்லடு கிளாஸ் ஸ்பின்னரை நாம் இரு மேட்சுகளாக வெளியே உட்கார வைத்திருக்கின்றோம். அடுத்த போட்டியிலும் இது நீடித்தால், அது இந்தியாவுக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகமே. ஜடேஜாவின் பவுலிங்கில் எந்த தாக்கமும் இல்லை. மொயீன் அலி கூட விக்கெட் எடுத்துவிட்டார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜாவால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. ஜடேஜாவை குறை சொல்வது நமது நோக்கமல்ல. முதல் டெஸ்ட்டில் முக்கியமான நேரத்தில் அவர் அரைசதம் அடித்து அணிக்கு பேருதவி ஆற்றினார். ஆனால், பவுலிங்கில்? இந்த 50 ரன்களை ஹனுமா விஹாரி அடித்து விடுவாரே? பவுலிங்கிலும் பயன்படுவார் என்பதாலேயே ஜடேஜா சேர்க்கப்படுகிறார். ஆனால், இங்கிலாந்து பிட்சில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஸோ, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஷ்வினை சேர்க்காமல் விட்டால், அது இந்தியாவுக்கு பாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது.
பசியோடு வெயிட்டிங்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமெனில், மிடில் ஆர்டர், லோர் ஆர்டர் என இரண்டு தரப்பும் தங்களை அடுத்த லெவலுக்கு கொண்டுச் சென்றே ஆக வேண்டும். குறிப்பாக, மிடில் ஆர்டர் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். சூர்யகுமார் யாதவ், ஹனுமா விஹாரி போன்றோர்கள் வெளியே பசியுடன் காத்திருக்கிறார்கள் என்பதை மிடில் ஆர்டர் தரப்பு மறந்துவிடக் கூடாது.