முன்னதாக பயிற்சியில் ஈடுபட்ட தோனி
கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. முன்னதாக சிஎஸ்கே வீரர்களுடன் சென்னை சிதம்பரம் மைதானத்தில் பௌலிங் கோச் லஷ்மிபதி பாலாஜியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி இதையடுத்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
அலட்டிக் கொள்ளாத தோனி
இதுகுறித்து தன்னிடம் எதுவும் பேசிக் கொள்ளாத தோனி, தொடர்ந்து ஓய்வு குறித்த அறிவிப்பை செய்துவிட்டு, தன்னிடம் வந்து, மைதானத்தில் பிட்ச்சில் அதிகமாக தண்ணீர் விட அறிவுறுத்தியதாகவும், இதையடுத்து சிறிது நேரம் கழித்து அவரது ஓய்வு குறித்து தனக்கு தெரியவந்ததாகவும், அவரின் இந்த போக்கு தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வாழ்வின் முக்கிய தருணம்
அவரின் ஓய்வு அறிவிப்பு என்பது மிகவும் முக்கியமான தருணம் என்பதை சுட்டிக் காட்டிய பாலாஜி, ஆனால் அந்த நேரத்திலும் அதை அமைதியாக கடந்து சென்ற அவரது இயல்பு குறித்த வியப்பிலிருந்து தான் வெளிவர தனக்கு அதிக நேரம் பிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டிலேயே இந்த நூற்றாண்டில் இத்தகைய வீரரை காண்பது அரிது என்றும் தெரிவித்துள்ளார்.
மாற்றியமைத்த தோனி
ஒரு போட்டியின் இறுதி ஓவரில் 20 ரன்கள் தேவையென்றால் தான் முதலில் தேர்வு செய்வது தோனியாக மட்டுமே இருக்க முடியும் என்றும் பாலாஜி தெரிவித்துள்ளார். அவருடைய தலைமை மற்றும் பேட்டிங் ஸ்டைல் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமானது என்றும் கேப்டன் குறித்த பழமையான கருத்தை மாற்றி அமைத்தவர் தோனி என்றும் பாலாஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்.