டோணி காலடி வைத்ததும் அதிர்ந்த சேப்பாக்கம் மைதானம்.. அசந்து போன பிசிசிஐ!
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டோணி காலடி எடுத்து வைத்தபோது, அரங்கமே ரசிகர்கள் கோஷத்தால் அதிர்ந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பத்திலேயே கோஹ்லி உட்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் நடையைகட்டிவிட்டனர். இந்த நிலையில், மிடில் ஆர்டரில் டோணி களமிறங்கினார். அணி மோசமான சூழலில் இருந்தபோதுதான் அவர் களமிறங்கும் நிலை இருந்தது.

அலைகடல் ஆர்ப்பரித்தது
சேப்பாக்கம் மைதானத்திற்குள், பேட்டுடன் டோணி காலடி எடுத்து வைத்ததும், மைதானமே அதிர்ந்தது. ரசிகர்கள் கரகோசம், ஓ.. என்ற ஆர்ப்பரிப்பு, விசில் சத்தம் என மைதானத்திற்குள் வங்ககடலே வந்துவிட்டதை போன்ற பேரிரைச்சல் எழுந்தது.
ராஜா வந்தார்
டோணி பிட்ச் வரை நடந்துவரும் வரையிலும் இந்த சத்தம் ஓயவில்லை. இதை கவனித்த பிசிசிஐ, தனது டிவிட்டர் பக்கத்தில், "சென்னைக்கு மன்னன் திரும்பிவிட்டார்" என்ற வாசகத்தை எழுதி, டோணிக்கு சென்னை ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை வீடியோ காட்சியாக வெளியிட்டுள்ளது.

ஆவேசமான ரசிகர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோணி. 2 வருடங்களாக சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்டிருந்தது. எனவே சென்னையில் டோணி களமிறங்குவதை பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் தவறவிட்டனர். அந்த ஆவேசத்தை பிரமாண்ட வரவேற்பு மூலம் நேற்று வெளிப்படுத்தினர் ரசிகர்கள்.

விளாசிய டோணி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை டோணி முழுமையாக பூர்த்தி செய்துவிட்டார். ஆரம்பத்தில் மெதுவாகவும் பிறகு அதிரடியும் காட்டிய டோணி, அரை சதம் கடந்து அணியின் அபார வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

கோஷங்கள்
டோணி களத்தில் நின்று அணியை மீட்டெடுத்தபோது, "டோணி.. டோணி.." என்ற கோஷங்களை எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர் சென்னை ரசிகர்கள். மும்பைக்கு சச்சின் கோஷம் என்றால், சென்னைக்கு டோணிதான் என்று சமூ வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications