இங்கி., பவுலர்களின் கண்களை வேர்க்க வைத்த ஹீரோ - 'முச்சதம்' கருண் நாயர் எங்கே?
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2016ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் முச்சதம் அடித்த கருண் நாயரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இந்திய கிரிக்கெட்டில் ஒருவர் ஹீரோவாவது சகஜம். ஆனால், ஹீரோவான ஒருவர் ஜீரோவாவது என்பது மிகவும் கொடுமையானது. அப்படி ஹீரோ டூ ஜீரோவானவர் கருண் நாயர்.
தற்போது அதே சேப்பாக் அரங்கில், அதே இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மல்லுக்கட்டுகின்றன. ஆனால், அன்று தனது முச்சதத்தால் அரங்கை அதிரவைத்த, மறுநாள் தலைப்புச் செய்திகளை அலங்கரித்த கருண் நாயர் குறித்து இங்கே பார்க்கலாம்.

மிக விரைவில் முச்சதம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தனது மூன்றாவது போட்டியிலேயே முச்சதம் அடித்திருந்தார் கருண் நாயர். ஆவரேஜ் 62.33. அதன்பிறகு 2017ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். பிறகு, 2018-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் தேர்வு செய்யப்பட்ட போது, எப்படியாவது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

சறுக்கிய கருண் நாயர்
ஆனால், ஹனுமா விஹாரி அப்போது அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டது மட்டுமில்லாமல், பிளேயிங் லெவனிலும் அவருக்கு ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், கருண் பெஞ்சில் உட்கார்ந்து போட்டியை பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அதிலிருந்தே கருண் நாயரின் கிரிக்கெட் கிராஃப் சரியத் தொடங்கிவிட்டது.

ஒரு சதம் கூட இல்லை
2018-19ம் ஆண்டில் அவர் தான் விளையாடிய கர்நாடக அணிக்காக ஒரு சதம் கூட எடுக்கவில்லை. 2018-19 ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் சோபிக்கவில்லை. அவரது ஆவரேஜ் 25 மட்டுமே. கடந்த 2019-2020 விஜய் ஹசாரே சீசனில் 9 போட்டிகளில் வெறும் 66 ரன்களே எடுத்திருந்தார். ரஞ்சி தொடரில் 366 ரன்கள் எடுத்திருந்தார். ஆவரேஜ் 26.14.

கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்
சமீபத்தில் முஷ்டக் அலி டிராபி தொடரில் கூட ஆறு இன்னிங்ஸில் அவரது சராசரி 15.50 மட்டுமே. இதன் காரணமாக கர்நாடக அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கருண், பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

முச்சதம் மூழ்கியது எப்படி?
இதுகுறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் சந்தோஷ் மேனன் கூறுகையில், "இன்று வரை கருண் நாயரின் பேட்டிங்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இங்கிலாந்தில் அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட பின், மனரீதியாக அவர் உடைந்துவிட்டார் என்று நினைக்கிறன்.

அனுபவித்து விளையாடவில்லை
ஐபிஎல் தொடரிலும் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பையும் அவரால் சரியாக பயன்படுத்த முடியவில்லை. ரன்களை குவிக்க முடியவில்லை. அவர் இப்போது அனுபவித்து கிரிக்கெட் விளையாடவில்லை. பிரஷருடன் விளையாடுகிறார்.

ஆர்வம் குறைந்துவிட்டது
விளையாட்டு மீதான ஆர்வம் குறைந்து, இப்போது வாழ்க்கைக்காக அவர் விளையாடுகிறார். வாழ்வதற்காக சாப்பிட வேண்டுமே தவிர, சாப்பிடுவதற்காக வாழக் கூடாது. எனினும் அவர் மீண்டு வருவார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். அப்படியே நாமும் நம்புவோமாக.


Click it and Unblock the Notifications