ஆடம் சாம்பா விக்கெட்
மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் ஆடம் சாம்பா தான் கடைசி ஓவரை வீசினார். அப்போது 5வது பந்தை சாம்பா வீசுவதற்கு முன்பாகவே நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த ரோஜர்ஸ் கிரீஸை விட்டு வெளியேறினார். இதனால் உடனடியாக மன்கட் முறையில் ஸ்டம்பிங் செய்து சாம்பா அவுட்டாக்கினார். இது 3வது நடுவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி நாட் அவுட் கொடுத்தனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து அம்பயர்கள் கொடுத்த விளக்கத்தை பார்க்கலாம். ஒரு பவுலர் பந்துவீச முழுமையாக செய்கைகளை செய்துவிட்டு, பந்தை ரிலீஸ் செய்யாமல் போனால் அந்த பந்து செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் பந்துவீசப்படும். அதே தான் இன்றும் நடந்துள்ளது. சாம்பா பந்தை வீசுவதற்குள் பேட்ஸ்மேன் வெளியேறியது உண்மை தான். ஆனால் பந்துவீச முழு செயல்பாட்டையும் சாம்பா செய்துவிட்டார். பாதியில் நிறுத்திவிட்டு அவுட்டாக்கியிருக்க வேண்டும். எனவே நாட் அவுட் எனக்கூறினர்.
அஸ்வின் ஸ்பெஷலிஸ்ட்
இதுபோன்ற முறையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்பெஷலிஸ்ட் ஆகும். இதுவரை ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்த மன்கட் முறை விக்கெட்கள் அனைத்தையும் எடுத்து பார்த்தால் புரியும், அவர் பந்தை வீச்சை முழுமையாக செய்வதற்கு முன்னதாகவே ஸ்டம்பில் அடித்து அவுட்டாக்கிவிடுவார். இன்னும் சில சமயங்களில் கையை கூட தூக்காமல் அப்படியே கணித்து அடித்துவிடுவார். ஆனால் இந்த நுணுக்கத்தை அறியாத சாம்பா மாட்டிக்கொண்டார்.
ரசிகர்கள் விளாசல்
எனினும் இதனை கிரிக்கெட் வல்லுநர்களும், முன்னாள் வீரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. சாம்பா முழு செயல்பாட்டையும் முடித்துவிட்டார் எனக்கூறுகிறீர்களே, அப்போது பேட்ஸ்மேன் தவறு செய்யவில்லை. தவறு செய்த பேட்ஸ்மேனுக்கு என்ன தண்டனை. எப்போது பவுலர்கள் மீது தான் குறைவைக்கப்படுகின்றன. சாம்பாவுக்கு மறுப்பு கொடுத்ததை போன்று, பேட்ஸ்மேனுக்கும் ஏதாவது ஒன்று செய்திருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.