மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசனின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன் அணியும் நாளை மோத உள்ளன. இதில், தொடர்ந்து 5 சீசனில் தன்னுடைய முதல் ஆட்டத்தில் தோல்வி என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நாளை துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.
இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்புவதால், இந்த சீசன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான துவக்க விழா மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடக்க உள்ளது. நாளை இரவு நடக்கும் இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே மைதானத்தில் மோத உள்ளன.
இரண்டு அணிகளுமே மிகவும் வலுவான மற்றும் வெற்றிகரமான அணிகள். சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு முறையும், மும்பை இந்தியன்ஸ் மூன்று முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. வேறு எந்த அணிகளுக்கும் இல்லாத ஒரு பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளது. இதுவரை தான் விளையாடிய அனைத்து சீசனிலும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது கேப்டன் கூல் டோணியின் அணி.
நாளை இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ள இந்த சீசனின் முதல் ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றுதான். இரவு அணிகளும் இதுவரை 22 முறை மோதியுள்ளன. அதில் 12ல் மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது. வாங்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 7 முறை
மோதியுள்ளன. அதில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் வென்றுள்ளது.
அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் ஸ்டார்டிங் டிரபிள் உள்ள அணி. கடந்த 5 சீசன்களில் முதல் லீக் ஆட்டங்களில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது. நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சிக்சர் அடிக்க வைக்க 'பத்மபூஷண் டோணி' அணி சிங்க கர்ஜனையோடு சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்சுக்கு பெரிய விசிலா அடிக்க ரெடியா?