கௌரவம்
விஸ்டன் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டிற்கும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு அவர்களை கௌரவப்படுத்தும். அது போல, 2019ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில், கடந்த பத்தாண்டுகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களாக ஐந்து வீரர்களை தேர்வு செய்துள்ளது.
அந்த ஐந்து வீரர்கள்
தென்னாப்பிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி மற்றும் இந்தியாவின் விராட் கோலி விஸ்டன் பத்தாண்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதிக ரன்கள்
விராட் கோலி கடந்த பத்தாண்டுகளில் அதிக சர்வதேச போட்டி ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அதிலும் எந்த வீரரையும் விட 5,775 ரன்கள் கூடுதலாக அடித்து மிரள வைத்துள்ளார்.
கோலி தான் கேப்டன்
சமீபத்தில் விஸ்டன் வெளியிட்ட கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒருநாள் அணிக்கான பட்டியலில் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும், கோலி குறித்து விஸ்டன் பத்திரிக்கை மிக உயர்வாக குறிப்பிட்டு உள்ளது.
டெஸ்ட் செயல்பாடு
கடந்த 2014 இங்கிலாந்து தொடரில் இருந்து சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் வரை கோலியின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 63. இந்த காலகட்டத்தில் அவர் 21 சதம் மற்றும் 13 அரைசதம் அடித்துள்ளார் என்று கூறி உள்ளது விஸ்டன்.
அதிக சராசரி
மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட சராசரி வைத்துள்ள ஒரே வீரர் கோலி மட்டுமே. ஸ்டீவ் ஸ்மித் கூட சமீபத்தில் அவரைப் போல ஒருவர் இல்லை என கூறி இருந்ததை நினைவு கூர்ந்துள்ளது விஸ்டன்.
சச்சின், தோனிக்கு பின்
சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்குப் பின், நிதானமாக சரிந்த தோனியின் வளர்ச்சிக்குப் பின், எந்த கிரிக்கெட் வீரரும் கோலி போல தினமும் அழுத்தத்துக்கு இடையே செயல்படவில்லை என புகழாரம் சூட்டி இருக்கிறது விஸ்டன்.
சச்சின் - தோனி ஒப்பீடு
விஸ்டன் பட்டியலில் கடந்த காலங்களில் பல முறை இடம் பெற்ற இந்திய வீரர்கள் சச்சின் மற்றும் தோனி தான். அவர்களுக்கு அடுத்து தொடர்ந்து விஸ்டன் சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்று வருபவர் கோலி தான். இந்த நிலையில், அவரை சச்சின், தோனியுடன் ஒப்பிட்டு கூறி இருக்கிறது விஸ்டன்.
அதிக சதம்
விராட் கோலி இதுவரை 70 சர்வதேச சதம் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 71 சதங்களும் மற்றும் சச்சின் 100 சதங்களும் அடித்து அவருக்கு முன்னே உள்ளனர். அவர்களையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கோலி முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.