ஈஸ்ட் லண்டன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6வது ஒருதினப் போட்டியில் இந்தியா விளையாடி கொண்டிருந்த அதே நேரத்தில், டி-20 போட்டியில் வெற்றி பெற்று, கோஹ்லி டீமுக்கு சவால் விடுத்தது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணி.இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் வென்று 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.ஒருதினப் போட்டி அணிக்கான கேப்டனான சீனியர் மிதாலி ராஜ் மற்றும் இளம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஜோடி சேர்ந்து, தென்னாப்பிரிக்க வீராங்கனைகளை துவம்சம் செய்தனர். வெற்றி இலக்கான 143 ரன்களை, 19.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இந்தியா வென்றது.ஸ்மிருதி இரானி, 42 பந்துகளில் 57 ரன்கள் குவித்து, ஒரு பக்கம் அதிரடி காட்டினார். மறுபுறம், மிதாலி தனது 12வது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.ஸ்மிருதியும் மிதாலியும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தனர். ஸ்மிருதி மூன்று சிக்சர்களும், நான்கு பவுண்டரிகளும் விளாசினார்.ஸ்மிருதி ருத்ரதாண்டவம் ஆடுவதை பார்த்து ரசித்த, மிதாலி 61 பந்துகளில் 76 ரன்கள் குவித்து, இரண்டாவது முறையாக ஆட்ட நாயகியானார். ஜூனியரான ஸ்மிருதி விளையாடுவதற்கு முழு வாய்ப்பையும் அளித்தார் மிதாலி. ஸ்மிருதி அவுட்டான போது, கடைசி மூன்று ஓவர்களில், 23 ரன்கள் தேவைப்பட்டது.அப்போது விஸ்வரூபம் எடுத்தார் மிதாலி. அயபோங்கா காகா வீசிய 18வது ஓவரில், இரண்டு பவுண்டரிகள் விளாசி எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். மொத்தம் 8 பவுண்டரிகள் அடித்த மிதாலி, கடைசியாக பவுண்டரி மூலம் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.முன்னதாக தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. சுனே லுஸ் 33 ரன்கள், நாதினி டி கிளார்க் 26 ரன்கள் அடித்தனர். பூணம் யாதவ் மற்றும் அனுஜா படேல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.