புதிய சாதனை
இதே போன்று ஐபிஎல் தொடர் போல் நடைபெற்ற மகளிருக்கான டி20 சேலஞ்சர்ஸ் போட்டியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சூப்பர் நோவால், வெலாசிட்டி இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து கண்டு களித்தனர்.
ஆண்களுக்கு இணையாக
மேலும் மகளிர் கிரிக்கெட்டில் 190 ரன்கள் அடித்து, ஆடவர்களுக்கு மகளிரும் கடும் போட்டியை அளித்தனர். இதனால் ஐபிஎல் மகளிர் கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டு முதல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனை ஐபிஎல் தொடரையொட்டி நடத்தலாமா, இல்லை செப்டம்பர் மாதம் நடத்தலாமா போன்ற ஆலோசனை நடத்தப்படுகிறது.
6 அணிகள்
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக வீராங்கனைகளை அனுப்புவது தொடர்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ முதல் கட்டமாக ஆலோசனை நடத்துகிறது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் ஐபிஎல் மகளிர் அணியை வாங்க திட்டமிட்டுள்ளன.
சிஎஸ்கே விருப்பம்
இந்த நிலையில், சென்னையை மையமாக கொண்ட சிஎஸ்கே அணியும், மகளிர் அணியை வாங்க முடிவு எடுத்துள்ளது. இது குறித்து பிசசிஐயிடம் சிஎஸ்கே முறைப்படி அணுகி உள்ளது, சமீபத்தில் சிஎஸ்கே அணியும் மகளிர் கிரிக்கெட்டிற்காக ஒரு அகாடமியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கினால், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.