மொகாலி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர் சப்போர்ட் கிடைத்துவருவதால் அந்த அணி வீரர்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவிற்குள் ரசிகர்கள் கணிசமானோர் உள்ளது இந்த தொடரின் மூலம் நன்கு தெரிந்தது.
அதிலும், எல்லை மாநிலமான பஞ்சாப்பில் அமைந்துள்ள மொகாலியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின்போதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியின்போதும், பாகிஸ்தானுக்கு அதிக ரசிகர்கள் சப்போர்ட் செய்து கோஷமிட்டதை பார்க்க முடிந்தது.
பாகிஸ்தான் ஜீடேகா.. அப்ரிடி லாலா.. என ரசிகர்கள் கோஷமிட்டனர். பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்கள், காஷ்மீர் மாநில மாணவர்களாக இருந்தனர். முகமது பஷீர் என்பவர் கூறுகையில், அப்ரிடி ஓய்வு பெறும் முன்பு ஆடும் கடைசி போட்டி இது என்பதால் அவருக்காகத்தான் இங்கு வந்துள்ளோம் என்றார்.
அனந்த்நாக் பகுதியில் இருந்து வந்திருந்த தொழிலதிபர் ரமீஸ் ரியாஸ் என்பவர் கூறுகையில், இன்றைய போட்டியில் அப்ரிடிக்கு சப்போர்ட் செய்ய வந்தேன். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை பார்த்துவிட்டே ஊருக்கு திரும்ப போகிறேன் என்று கூறினார்.
இந்தியாவில் விளையாடுவது தாயகத்தில் ஆடுவதை போன்ற மகிழ்ச்சியை தந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் விருந்தோம்பல் பண்பை அப்ரிடி, வக்கார் யூனிஸ் போன்றோர் ஏற்கனவே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.