யோ-யோ டெஸ்ட் எப்படி நடக்கிறது?
ஒரு சம தளத்தில், 20 மீட்டர் இடைவெளியில் இரண்டு முக்கோண வடிவ கோன்கள் வைக்கப்பட்டு இருக்கும். முதலில் ஒரு பீப் (BEEP) சத்தம் கொடுக்கப்படும். அப்போது, அதில் பங்கேற்கும் வீரர் ஒரு பக்கத்தில் இருந்து ஓட ஆரம்பித்து, இரண்டாவது கோன் இருக்கும் இடத்தை, இரண்டாவது பீப் சத்தம் வரும் நேரத்திற்குள் அடைய வேண்டும். மீண்டும், அங்கிருந்து ஆரம்பித்த இடத்திற்கு, மூன்றாவது பீப் சத்தம் வருவதற்குள் சென்று அடைய வேண்டும். இது ஒரு ஷட்டில் (SHUTTLE) என்று அழைக்கப்படும்.
நிறுத்தாமல் முடிக்க வேண்டும்
இது போல, பல ஷட்டில்களை பல கட்டங்களாக, நிறுத்தாமல் ஒரு வீரர் முடிக்க வேண்டும். பீப் சத்தம் வரும் நேர அளவும், ஒவ்வொரு கட்டத்திற்கும் குறைந்து கொண்டே வரும். அதாவது, மெதுவாக ஓட ஆரம்பிக்கும் ஒரு வீரர், தன் வேகத்தை அதிகரித்துக்கொண்டு வந்தால் மட்டுமே, இதை முடிக்க முடியும். அனைவருக்கும், புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், இரண்டு கிலோமீட்டர் தூரத்தை, சுமார் எட்டு நிமிடத்தில் ஒருவரால் கடக்க முடிந்தால், அவரால் யோ-யோ டெஸ்டை முடிக்க முடியும். அதே போல, பொதுவான ஒரு கருத்தின்படி, தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களால் இந்த தேர்வை எளிதாக முடிக்க முடியும்.
யோ-யோ டெஸ்ட் தேவையா?
அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்க்சுக்காக, மிக அதிக ரன் சேர்த்ததோடு, தன் சிறந்த ஐபிஎல் ஆட்டத்தையும் பதிவு செய்தார். சஞ்சு சாம்சனும் தன் சிறப்பான ஆட்டத்தால் அதிரடியாக ரன் குவித்தார். அப்படிப்பட்ட, பார்மில் இருக்கும் வீரர்களுக்கு உடற்தகுதி இல்லை என்று சொன்னால், உடற்தகுதியே இல்லாமல்தான் ராயுடுவும், சாம்சனும் ரன் குவித்தார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
சமூக வலைதளங்களில் விவாதம்
இது சமூக வலைதளங்களில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த விவாதங்களை எழுப்பி உள்ளது. ஒரு சிலர், சில வீரர்களை ஒதுக்குவதற்கே இந்த தேர்வு பயன்படுவதாகவும், சிலர் இந்த தேர்வு நடப்பதை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும், மேலும் சிலரோ, இந்த யோ-யோ தேர்வே தேவையில்லை என்றும் கூறி வருகிறார்கள்.