பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கு யோ-யோ உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம், மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பாய்ந்துள்ளது. இந்திய வீராங்கனைகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டென்மார்க்கைச் சேர்ந்த விளையாட்டு மற்றும் உடற்தகுதி நிபுணரான டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ என்பவர் உருவாக்கியதுதான் யோ - யோ உடல்தகுதி தேர்வு. அதாவது குறிப்பிட்ட விளையாட்டை விளையாடும் வீரர்கள் உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய இந்த சோதனை நடத்தப்படுகிறது.
இதை இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது 20 மீட்டர் இடைவெளியை வேகமாக கடக்க வேண்டும். இவ்வாறு மாறி மாறி ஓடிக் கொண்டிருக்க வேண்டும். வேகமாக ஓடுவதற்கு ஏற்ப மதிப்பெண் கிடைக்கும்.
தற்போது 16.1 மதிப்பெண் பெற்றால்தான் இந்திய அணிக்காக பரிசீலிக்கப்படுகிறது. தொடர்ந்து நல்ல பார்மில் இருந்தாலும், யோ யோ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், அணியில் இடம்பெறும் நிலை உள்ளது. இது பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு செல்லும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி எடுத்து வருகிறது.
அவர்களுக்கும் யோ யோ தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதை அணியின் சீனியரான ஜூவாலா கோஸ்வாமி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், யோ யோ சோதனையில் ஈடுபட்டதாக, சக வீராங்கனைகளுடன் எடுத்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால், இந்தத் தேர்வில் யார் யார் தேர்ச்சி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் பெண்கள் அணிக்கும் யோ யோ தேர்வு கட்டாயம் என்பது உறுதியாகி உள்ளது.